Quantcast
Channel: சின்னு ரேஸ்ரி
Viewing all 51 articles
Browse latest View live

பழம் வாங்கலையோ... பழம் .... பிளம் பழம்

$
0
0
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் அக்ரிலை ஆய்வு நிறுவனம் செய்த ஒரு ஆய்வானது பிளம், பீச் பழங்களில் புற்றுநொயைத் தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


பினோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருட்களான குளொரோஜெனிக் மற்றும் நியோ குளேராஜெனிக் அமிலம் போன்ற இராசாயனங்கள்தான் புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது. இந்த இராசாயனங்கள் பழவகைகள் யாவற்றிலும் காணப்படுகின்றன. இருந்தாலும் பிளம்பழத்தில் கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள்.

எமது நாட்டில் பயிரிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கொம்பிலக்ஸ்களில் விற்பனையாகின்றன.


மென்மையான வட்டமான வழவழப்பான தோலையுடைய சதைப்பிடிப்பான இனிய பழம் இது.


மஞ்சள், வெள்ளை பச்சை, சிகப்பு,ஊதா கலர்களில் இருக்கும்.

பச்சை நிறத்தை அண்டிய வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும்.


தேனீக்கள் தேன் உண்ண முயலுகையில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.

Autum காலத்தில் இலைகளை உதிர்த்து Early Spring ல் பூக்களைக் கொடுக்கும்.

பெரிய பழம் 3-6 செ.மீ அளவிருக்கும்.

முற்றிய பழத்தின் மேலே வெள்ளை படர்ந்தது போல இருக்கும்.

மரம் 5-7 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியது. ரோசேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல்பெயர் பிருனஸ்சலிசினா.

உலரவைத்த பிளம்ஸ் ப்ருனே Prunes என அழைக்கப்படும்.

வடஅமெரிக்க, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் இயற்கையில் காணப்பட்டது. ரோமானியர்கள் வடக்கு ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தினர்.

இதில் பெரும்பாலும் நான்கு வகை இருக்கிறது.
  1. யூரோப்பியன் பிளம், 
  2. ஜப்பானிய பிளம், 
  3. Damsons and mirabeels
  4. Cherry plums.

ஐரோப்பிய இனத்தை விட ஜப்பானிய இனப் பிளம் பெரியதாக இருக்கும்.

"பழம் வாங்கலையோ பழம்.." என இடுப்பில் கடகம் ஏந்தி,
கூவியழைத்து பழ விற்பனைக்கு வந்தாள் சின்னு.
சின்னப் பெண்ணாக இருக்கையில் ....

போட்டியில் பரிசுபெற்ற சின்னுவை, அவளின் வெற்றியின் ரகசியம் என்ன என வினவுகின்றனர்.

பழக்காரியாக சின்னு

ஜப்பானிய பிளம், சைனீஸ் பிளம் என்றே அழைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜப்பான் 200-300 வருடங்களுக்கு முன்பிருந்தே சைனாவில் இருந்து இறக்குமதி செய்தது. சைனா 1000 வருடங்களாகவே பயிரிட்டு வந்திருக்கிறது. ஜப்பான் உலக நாடுகளுக்குப் பரப்பியதால் ஜப்பானிய பிளம் எனப் பெயர் வந்தது. ஜப்பானிய பிளம் ஏற்றுமதியில் கலிபோனியா பிரபல்யமான இடத்தை வகிக்கிறது.

நேரடியாக பழத்தை உண்பதுடன் கான்களில் கிடைக்கும். யூஸ், ஜாம், சிரப் தயாரித்துக் கொள்வார்கள்.

பிளம் யூசிலிருந்து பிளம் வைன், பிரண்டி தயாராகும்.

ஆசியாவில் ‘பிக்கிள்ட் பிளம்’ ஒரு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.

சலட்டாக தயாரித்தும் உண்ணலாம். 

காபோஹைதிரேட் கூடுதலாக உள்ளது. குறைந்தளவு கொழுப்பு உள்ளது.
எடை குறைப்பிற்கு ஏற்ற  உணவு.
விற்றமின் சீ அதிகஅளவில் இருப்பதால் தடிமன் சளியை அண்டவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.
நார்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.

100 கிராமில் உள்ள போசனை


காபோஹைதிரேட் 13.1 கிராம்,
கொழுப்பு 0.62 கிராம்,
Fiber  2.2 கிராம்.
நீர்ப்பிடிப்பு 84 சதவிகிதம்,  
Energy 55 kcal,
புரொட்டின் 0.8 கிராம்.
விற்றமின் சீ 5 மிகி
B1 0.02 மிகி.
B2 0.3 மிகி.
B6 0.10 மிகி.
Vitamin E 0.7>  
Vitamin A 18 ug ,  
Potassium- K 172mg,  
Calcium-ca 4 mg.   

பிளம் சலட் செய்துகொள்வோமா.

தேவையான பொருட்கள்
  • பிளம் பழம் - 2
  • பச்சை ஆப்பிள் - ½
  • கிறேப்ஸ் விதையில்லாதது - 5-6
  • துளசி இலை – 6-7
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  • லெமன் ஜீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • சோல்ட், பெப்பர்பவுடர் - சிறிதளவு

செய்முறை

பழங்கள், துளசி இலைகளைக் கழுவி எடுங்கள.;

பிளம்,ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.கிரேப்ஸ் முழுதாகப் போட்டுக்கோள்ளலாம்.

துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

லெமென் சாற்றுடன், உப்பு. பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு போலில் பழங்களைப் போடுங்கள்.  கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள்.

வெட்டி எடுத்த துளசி இலையை  தூவி விடுங்கள்.

புதிய சுவையில் சலட் தயாராகிவிட்டது. ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.




 பழங்கள் பற்றிய எனது ஏனைய பதிவுகளுக்கு

பயன் தரும் பழங்கள் 2

மாதேவி

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்

$
0
0
மொஸபத்தேமியா சிந்து வெளி நாகரீக காலத்தில் உபயோகிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்கள் பலவும் அகழ்வாரச்சிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அக்கால நாகரீக மக்கள் வாழ்க்கை, கலைகலாசாரங்களை அறிந்து கொள்ளுகின்றோம்.

தற்பொழுது வழக்கொழிந்துபோன,  சில தலைமுறைகளுக்கு முந்திய அடுக்களைப் பொருட்களை நினைவு மீட்போமா?


ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம்.கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும்  இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.


வயல்நெல்அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர்.அன்னம் இடும்பாத்திரம் லஷ்மிஎன்பர்.


புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட  மாவறுக்க பெரிய மண் சட்டியும்,  பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும், அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின்சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர்வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க ஜில் என்று இருக்கும்.
நிலாச்சோறு எப்படி?



வெண்கலப் பாத்திரங்கள் குடிபுகுந்தன. வெண்கலச் சருவச்சட்டி, குடம், செம்பு, பானை, அண்டா, குண்டா,கரண்டி, இட்லிப் பானை, தாம்பாளம், குத்துவிளக்கு, கைவிளக்கு, வெற்றிலைத்தட்டு, செம்பு என்பன புளக்கத்தில் இருந்தன.


வெண்கலக் கடைக்குள் ஆனை புகந்தாற் போல் தடாம்...டமார்.... சத்தங்களுக்கும் குறைவிருக்கவில்லை.

வெற்றிலைத் தட்டும் பூட்டுச் செம்பும்

பிரயாணத்தின் போது காப்பி எடுத்துச் செல்ல பூட்டுச் செம்பு பேணியுடன் இருந்தது. வெண்கலச் சருவச் சட்டியில் கறி செய்வதாக இருந்தால் உட்புறம் ஈயம் பூசி வைத்திருந்தார்கள். மூக்குப் பேணி, வெண்கலப் பேணி,  காப்பி ரீ அருந்த உபயோகமாக இருந்தன.


கூஜா, தூக்கு வாளி என்பன பிரயாணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. தூக்கு வாளியுள் சாதத்தையிட்டு இடுக்குச் சட்டியில் கறிகளை வைத்து எடுத்துச் சென்றனர்.

இரும்புப் பாத்திரங்கள் தாச்சி, கண் அகப்பைக் கரண்டி, தோசைக் கல்லு, தட்டு அகப்பை(தோசை திருப்பி), கேத்தல் போன்றவை நீண்ட காலம் அழியாது உழைத்தன. பெரிய இரும்புத் தாச்சிகள் கச்சான், பயறு, உழுந்து, மிளகாய் அரிசிமா வறுக்கவும் இருந்தன. சிறிய தாச்சியில் குழம்பு, பொரியில் செய்து கொள்வர். இதில் சமைத்த வத்தல் குழம்பு மிகுந்த சுவையைத் தரும்.

காம்புச் சத்தகம்

இரும்பாலான காம்புச் சத்தகம், இது மரக்கறி வெட்டவும் பயன்பட்டது. நீண்ட காம்புடன் முன் பகுதிவளைந்திருக்கும் பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள். தோக்கத்தி தேங்காய் உடைக்கவும் மரங்கள் வெட்டவும் பயன்பட்டன.

வெட்டுக் கத்தி இறைச்சி மீன் வெட்டவும் பயன்பட்டது. இரும்பாலான மேசைக் கத்தியும் பாவனையில் இருந்தது.


திருவலகை

தேங்காய் துருவ திருவலகை மரக்கறி வெட்ட அரிவாள் மனை என்பனவும் கை கொடுத்தன.

கொக்கைத் தடி

கொக்கச் சத்தகம் உயர்ந்த தடியில் கட்டி வைத்திருப்பர் தோட்டத்தில் தேங்காய்,மாங்காய்,முருங்கக்காய் பறிப்பதற்கு.


அந் நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் "வெத்தலைத் தட்டைக் கொண்டு வா" என அம்மா மகளுக்கு ஓடர் போடுவாள். வெற்றிலைத் தட்டில், பாக்கு வெட்டியும் இருக்கும்.

பாக்கு வெட்டி

பாக்கு வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சீன ஜாடிகள் ஊறுகாய், உப்பு, புளி, எண்ணெய், நெய் சேமிக்க உதவின.  கண்ணாடிப் போத்தல்கள் சீனி, தேயிலை, கோப்பி, மிளகாய்ப் பொடி, மா வகைகள், தின் பண்டங்கள் சேமித்து வைக்க உதவின.

அலுமினிய ஈயப் பொருட்கள் பாவனையில் வந்தன. ஈயத்தில் அரிசி அரிப்பதற்கு அரிக்கன் சட்டி இருந்தது. சட்டி, தோசைக் கல்லு, குளிப் பணியாரக் கல்லு, தாச்சி என்பனவும் இடம் பிடித்தன.


குசினியில் தண்ணி அள்ளி வைத்துப் பிழங்குவதற்கு தகர வாளி இருந்தது. குடமும் உபயோகித்தனர்.

மரத்தாலான இடியாப்ப உரல்,முறுக்கு உரல், கரண்டி, அகப்பை,மோர்கடைய மத்து, இருந்தன.ஆப்பைக்கூடு துளையுள்ளது தட்டகப்பை ,மத்து,கரண்டி செருகிவைத்து தொங்க விட்டிருப்பார்கள்.


மத்து உருட்டும் பெண்

பனைநாரால் செய்யப்பட்ட திரிகணை சட்டி பானையை இறக்கி வைப்பதற்கு இருந்தது. பனங் சார்வோலையை வெட்டி  வெயிலில் காய வைத்து எடுத்து ஓலைப் பெட்டி, மூடியுடன் இளைத்து வைத்திருப்பர். புட்டு இடியப்பம் பலகாரங்கள் வைத்து மூடி வைப்பர்.

தட்டுப் பெட்டி, வெங்காயம் மரக்கறி, மிளகாய் பரப்பி வைப்பதற்கு உதவின. நிலத்தில் போட்டு இருப்பதற்கு தடுக்கு வைத்திருந்தனர்.வைபவங்களுக்கு சோறு சமைத்து ஆறப்போடச் சோற்றுப் பாய் இருந்தது. சாப்பிட பந்திப் பாய் வைத்திருந்தனர்.


சுளகு, இடியாப்பத் தட்டு, ஓலைத் தட்டு

ஐஞ்சறை ஓலைப் பெட்டி மசாலா சரக்கு சாமான்கள் வைப்பதற்கும், சுளகு புடைப்பதற்கும், நீத்துப் பெட்டி புட்டு அவிக்கவும், இடியாப்பத் தட்டுக்கள்,பனங்கட்டிக்குட்டான் இருந்தன.

நீத்துப் பெட்டி, முறுக்கு இடியாப்ப உரல்கள்

பனை நாரில் உறிகட்டி சமைத்த உணவை பாதுகாத்தனர்.கடகம், குஞ்சுக்கடகம் தானியசேமிப்புக்கும் தோட்டத்தில் மரக்கறிபிடுங்கவும் உதவியது.வியர்க்கும்போது விசுறுவதற்கு பனைஓலை விசிறி வைத்திருந்தனர்.


சந்தைக்கு எடுத்துச் சென்று மீன் மரக்கறி வாங்க பன் உமல் இப்பொழுது உள்ள சொப்பிங் பாக் போலப் பயன்பட்டது. இவை சாயமிடப்பட்ட ஓலையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

அடுக்களைக் கனவுகள் தொடரும் .......

மாதேவி

முக்காற் பணத்தில் முழு விருந்து சுண்டைக்காய்

$
0
0
சுண்டைக் காய்  செடி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு வகைக் கத்தரியாகும். கத்தரியில் பல வகைகள் உண்டு. Brinjal, Eggpalntஎனவும் அழைப்பர். தாவரவியல் பெயர் Solnum melongenaஆகும். Eggplant bush, Garden egg, Mad apple, Aubergineபோன்றவையும் வேறு பெயர்கள்.


வெள்ளை நிறத்தில் கட்டையாக குண்டாக ஒரு வகை. கத்தரிப்பூ கலரில் நீண்டதாக இன்னொருவகை. இதைவிட கண்டங் கத்தரி என்பது சிறியதாக வெள்ளை மஞ்சள் நிறங்களில் இருக்கும். வட்டுக் கத்தரி பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் பூசியது போல பல்ப் வடிவில் இருக்கும்.


மிகவும் சிறியது சுண்டைக் கத்தரிக்காய்கள். Turkey berry. Devil's Fig, Prickly Nightshade, Shoo-shoo Bush, Wild Eggplant, Pea Eggplantஎனவும் சொல்வார்களாம்.
 

தாவரவியல் பெயர் Solanum torvum.
 

பெரிய இலையுடைய மரத்தில் கொத்தாய் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் பச்சை நிறத்தில் பட்டாணி போன்று இருக்கும்.


பறவைகள் உண்ணும்போது பரம்பலால் இயற்கையாகவே வளரக் கூடிய தாவரம் இது. இரண்டு மூன்று மீற்றர் உயரம் வரை  வளரும். சொர சொரப்பாக இருக்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் காரணம் அவற்றின் மீதிருக்கும் நுண்ணிய வெள்ளை தும்புகளாகும். இரண்டு வருடம் வரை பலன் கொடுக்கக் கூடியது.

பச்சை நிறத்தில் உள்ள காய்கள் கனியும்போது மஞ்சள் நிறமாக மாறும்.


இது புளொரிடா, தெற்கு அலபாமா ஆகிய இடங்களைச் சார்ந்ததாகும். அங்கிருந்தே ஆபிரிக்கா. அவுஸ்திரேலியா, ஆசியா எனப் பரந்தது.

'சுண்டங்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்' என்பார்கள். எனினும் இது ஒதுக்கித்தள்ளக் கூடிய காய்கறி அல்ல. நார்ப்பொருள் நிறைய உள்ளது. அத்துடன் சுதேச வைத்திய முறைகளில்  சிறு நீர் பெருகுவதற்கும், உணவைச் சமிபாடடையச் செய்வதற்கும், இருமலுக்கும், ஈரல் நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தையும் வரச்செய்யக் கூடியது என சொல்கிறார்கள். வயிற்றுப் பூச்சிக்கும் சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இருந்தபோதும் நவீன மருத்துவத்தில் இது பற்றிய ஆய்வு ரீதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

முற்றிய காய்கள் கசக்கும்.

வாங்கியிருந்தால் என்ன செய்யலாம்?

அதற்கும் ஓர் வழி. காய்களை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி எடுங்கள்.

ஒரு பலகைக் கட்டையின் மேல் வைத்து, தேங்காய் அல்லது சப்பாத்திக் குளவியால் குத்துங்கள். காய் உடைந்து முற்றிய விதைகள் வந்துவிடும்.

ஒரு வடியில் கொட்டி ஓடும் நீரில் அலசி எடுங்கள். வடிய விட்டு எடுத்து வதக்கிக் கொள்ளலாம். சுவையான குழம்பும் கிடைக்கும். இக் குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது ++ செய்தியாகும்.

காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.


கூட்டு, மோர்க் குழம்பு, சாம்பார்,பொரியல், அவியல் செய்து கொள்ளலாம். காரக் குழம்பு பிடிக்காதவர்கள் வதக்கி எடுத்து மஞ்சள்பொடி, தனியாப் பொடி சேர்த்து பால்க் குழம்பாகவும் செய்து கொள்ளலாம்.

தக்காளி சேர்த்துக் கொண்டால் சுவை மாற்றமாக இருக்கும்.

காய்க் காரக் குழம்பு

தேவையானவை


காய் - ¼ கிலோ
வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4.5 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்ப+ன்
கடுகு ¼ ரீ ஸ்ப+ன்
தேங்காய்ப் பால்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி-1 ரீ ஸ்ப+ன்.
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்ப+ன்.
உப்பு புளிக்கரைசல் தேவையான அளவு.
கறிவேற்பிலை சிறிதளவு.
ஓயில் - 2 டேபள் ஸ்பூன்.

செய்முறை 

பிஞ்சுக் காய்களாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். காம்பை உடைத்து அலசி வடிய விடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தனியே வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டு நசுக்கி வையுங்கள். வாழைக்காய் சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஓயிலில் காய்களையும் வாழைக்காயையும் நன்கு வதக்கி எடுத்து வையுங்கள். சிறிது ஓயிலில் கடுகு வெடிக்க வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை போட்டு வதக்குங்கள்.



வெந்தயம் போட்டு வதக்கிய காய்களைக் கொட்டி, புளித் தண்ணீர் விட்டு உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தனியாபொடிகள் போட்டு கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய்ப் பால் 2 டேபிள் ஸ்பூன் விட்டு இறக்குங்கள்.


பொரித்த வாசத்துடன் மணம்கமழும் குழம்பு உங்களைச் சாப்பிட அழைக்கும்.

கத்தரிச் சமையல் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்

சரக்குத் தண்ணி - பத்திய உணவு

பாட்டியின் மண் சட்டிக் கறி

கத்தரி கடலைக் குழம்பு

பைவ் ஸ்டார் சலட்

‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’

$
0
0
காலையில் எழுந்ததும் பழைய சோற்றுத் தண்ணீரை பானை மூடியில் விட்டு குடித்துப் பழகியவர்கள் எமது முன்னோர்.

ஆரம்பத்தில் தெருச் சந்தியில் அண்டாவை வைத்து தேத்தண்ணி போட்டு கொண்டு வந்து வீடு வீடாகக் தட்டிக் கூப்பிட்டு கோப்பைகளில் ஊற்றி குடிக்கப் பழக்கிக் கொடுத்துத்தான் தேநீரைக் குடிக்கப் பழக்கினார்களாம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்.

பிரிட்டிஷ் மகாராணியின் சின்னம் பதித்த தேநீர் குவளை

இது என்ன கசக்கிறதே என முகம் சுளித்தனர் பிற்பாடு குடிக்கக் குடிக்கப் பழகி இப்போது ஒரு நாளைக்கு 5- 6 தடவைகள் குடிப்போரும் இருக்கவே செய்கிறார்கள்.        

‘தேத்தண்ணி போட்டாச்சே’ இக் கேள்வியுடன் தான் இலங்கையின் காலைப் பொழுதுகள் விடிவிற்கு வரும். அத்துடன் இடையிடையே ‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’ என்ற கேள்விகளும் வீடுகளில் தொடரும். ‘கஹட்ட’, ‘சாயா’, ‘பிளேன் ரீ’ எனப்பலவாறு அழைப்பர்.

தேத்தண்ணி குடிக்க வாறீங்களா?

வெறும் தேத்தண்ணி, பசுப்பால் தேத்தண்ணி, ரின்பால் தேத்தண்ணி, பால் பவுடர் தேத்தண்ணி, என இன்னும் பலவும் தயாராகும்.

கொழுத்தும் வெயிலில் கூட விருந்தாளிகளை வரவேற்று “தேத்தண்ணி குடியுங்கோவன்” என இனிக்க உபசரித்து தேநீர் போட்டு வழங்குவார்கள்.

இந்தியர்கள் பால் காப்பிக்கு அடிமையானது போல இலங்கையர் தேநீருக்கு சலாம் போடுவார்கள்.காப்பியைவிட ரீயில் காபைனின் செறிவு கிட்டத்தட்ட அரைவாசி குறைவாக உள்ளமை தேநீரின் நன்மையாகும்.

தேயிலை பயரிடப்படும் இடங்கள்

முதன் முதல் 1824 தேயிலைச் செடி பிரிட்டிஷசாரால் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு ரோயல் பொட்டனிக்கல் கார்டன் பேரதெனியாவில் நாட்டப்பட்டது. 1867ல் ஜேம்ஸ் ரெயிலரால் தொழிற்சாலை அறிமுகப்படுத்தப்பட்டது. லுணகந்தவில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் பரவின.



உலகம் பூராவும் பிரபலமானது இலங்கைத் தேயிலை. சிலோன் ரீ, பிளக் ரீ, வைற் சில்வர் ரீ, என தயாரிக்கப்பட்டது. இப்பொழுது பலவித ப்ளேவர்களிலும் கிடைக்கிறது. தேயிலையின் தரம் பயிரிடப்படும் இடத்தின் உயரத்தையும் கால நிலையையும் பொறுத்து அமையும். இலங்கையில் ஆறு இடங்களில் தேயிலை பயிரிடப்படுகிறது. காலி, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, ஊவா, டிம்புல்ல


தேயிலைக்குப் பெயர்பெற்ற நுவரெலியாவின் ஒரு  தேயிலைத் தோட்டம்

1500 மீற்றருக்கு மேல் நன்கு வளரும் தேயிலை. நுவரெலியாத் தேயிலை 6000 அடிக்கு மேல் வளர்வதால் சிறந்ததாக இருக்கும்.

ஆரம்பத்தில் தேயிலை இலை மருத்துவமாக பாவிக்கப்பட்டது. ஆதிதொட்டு பல இலைவகைகள் மருந்தாக உபயோகிக்கப்பட்டன. தேங்காய்ப்பூக் கீரை, கொத்தமல்லி, கற்பூரவல்லி, தூதுவளை, முடக்கொத்தான். மணத்தக்காளி, பொன்னாங்காணி போன்ற பலவும் நோயுற்ற வேளைஅவித்துக் குடிப்பார்கள். பசும் இலைகள் புதினா, கொத்தமல்லி,வெற்றிலை, துளசியும் அடங்கும்.

சீனாவின் பேரரசர் சென்னா முதல் முதலாக தேயிலையின் ருசியைக் கண்டு பிடித்தவராவார். குடிப்பதற்காக நீரைச் சுட வைக்கும்போது காய்ந்த தேயிலை இலை தண்ணீரில் விழுந்து தண்ணீரின் நிறம் மாற்றமடைந்தது. அந்த நீரைக் குடித்தபின் மிகுந்த புத்துணர்ச்சி கொடுத்தது. அவ்வாறு பிறந்ததுதான் தேநீர்.

சீனர்கள் தேநீர் தயாரிப்பதை ஒரு கலையாகவே செய்கிறார்கள். தயாரிக்கும் இடம் பாத்திரங்கள் யாவும் சுத்திகரிக்கப்பட்டு மிகவும் அழகுற இருக்கும். மிகவும் பக்குவமாக நிதானத்துடன் தயாரிப்பார்கள்.

இலங்கை ரீயின் பின்னணியில் மலையகக் கண்ணீரும் பல கதைகள் கூறும் என்பதை மறக்க முடியாது.

உறையும் குளிரில் உழைக்கும் இவர்களின் கண்ணீர் தேநீர் ஆகிறதா?

தேநீருக்கும் எமக்குமான உறவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறது. காய்ச்சல் வந்தால் 2-3 நாட்களுக்கு சாப்பாடுகிடையாது வெறும் தேத்தண்ணி குடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. அந்நாளில் பாடசாலை சென்றால் வீட்டிலிருந்து தேநீர் தயாரித்து எடுத்துவருவார்கள் எமது பாட்டிமார்.   காச்சல் விட்டபின் மொறுமொறு என இருக்கும் ரோஸ்பாணை தேநீருடன் தொட்டுச் சாப்பிடக்கொடுப்பர். மறுநாள்தான்; அப்பம் சோறு கிடைக்கும்.

ஆமணக்கு எண்ணை பேதி குடித்த அனுபவம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா?  அந்நாள்முளுவதும் பீளேன் ரீ மட்டும் குடிப்பார்கள். காலை மதிய உணவு ஒன்றும் கிடையாது.

தேயிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. தடிமன் வந்த நேரம் தேயிலையை சுடுநீரில் போட்டு கை வைக்கும் சூட்டுடன் அள்ளியெடுத்து முகத்தில் ஊற்றிக் கழுவுவார்கள். சுடச்சுட ஊற்றிக் கழுவுவதால் சளி நீங்கிச் சுகம் கிடைக்கும்.

மூக்கடைப்பு இருக்கும்போது தேயிலையைக் கொதி நீரில் போட்டு ஆவி பிடிப்பார்கள்.

சர்க்கரை, பால்சேர்க்காத ரீ குடிப்பது உடல் நலத்திற்குச் சிறந்தது எடையையும் அதிகரிக்காது. 

அன்ரிஓக்சிடனற் (Antioxidant) இருப்பதால் கான்சருக்கு எதிரானது. சூலகப் புற்றுநோய்கான சாத்தியத்தைக் குறைக்கும். கொலஸ்டரோல், பிளட் பிரசரைக் குறைக்கும். தடிமன் தொற்றுக்கும் எதிரானது என்றும் சொல்கிறார்கள்.
 

கிறீன் ரீ பற்றி இப்பொழுது அதிகம் பேசப்படுகிறது. சீனர்களின் பாரம்பரிய பானமான இது பல மருத்துவக் குணங்களை கொண்டது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்கள், இருதய நோய்களுக்கு எதிரானது. கெட்ட கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதன் மூலம் இருதய நோய்களைக் குறைக்கிறது எனத் தெரிகிறது. எடை குறைப்பிற்கும் நல்லது என்கிறார்கள்.

பலவித பிளேவர்களிலும் ரீ பாக்ஸ் கிடைக்கிறது. ஒரேன்ஜ், லெமன், மொறாக்கன் மின்ற், றம், இவற்றின் விலைகள் சற்று அதிகமாக இருக்கும். வாங்கினால் ஓரிரு இன பைக்கற்தான் முடியுமட்டும் தொடர்ந்து யூஸ் செய்ய வேண்டியதாய் வரும்.

சாதா தேயிலையுடன் ஒரு நேரத்திற்கு ஒரு சுவையாக தயாரித்து வீட்டில் உள்ளோரையும் அசத்தலாம். குளிருக்கு இதமாகவும் அருந்தலாம்.

லெமென் ரீ, ஆரேஞ் ரீ,

ரீயைத் தயாரித்த பின் குடிக்கும் அளவான சூட்டில் சீனி கலக்கியபின் சில துளி பழச் சாற்றை மேலே விட்டு சேர்த்து அருந்தலாம்.



கறுவா ரீ

தேயிலையுடன் கறுவாவைப் போட்டு சுடுநீர் ஊற்றி மூடி போட்டு வைத்து  வடித்தெடுத்து சீனி சேர்த்து குடிக்கலாம்.

கராம்பு ரீ

கராம்பை லேசாகத் தட்டி ரீயுடன் போட்டு மூடி வைத்து எடுத்தால் சற்றுக் காரமான ரீ கிடைக்கும்.

ஏலம், கறுவா, இஞ்சி

ஏலம் ரீ

வாசமான  கமகம ஏலம் ரீ இதே போலத் தயாரிக்கலாம். இந்த ரீ பசியைத் தூண்டும் என்பார்கள்.

வனிலா ரீ

வனிலா ப்ளேவர் விட்டும் தயாரிப்பார்கள் சிலர்.

ஜஸ் ரீ

தேநீரைத்தயாரித்து ஆற குளிரவைத்தெடுத்து ஜஸ் கட்டிகள் போட்டு வெப்பத்துக்கு குடிக்க இதமாய் இருக்கும்.

இஞ்சி ரீ

சிறிய இஞ்சித் துண்டைத் தோல் நீக்கி கழுவி எடுத்து தட்டி தேயிலைத் தூள் போட்டுகொதிநீர் விட்டு முடிவைத்து வடித்தெடுப்பர். இது வயிற்றுப் போக்கு, சத்தி, சமிபாடடையாமையைத் தடுக்கும் என்பர்.

மசாலா ரீ

கராம்பு 1, ஏலம் 1, பட்டை ஒரு துண்டு கலந்து ரீயுடன் போட்டு குடிக்கலாம். இத்துடன் பாலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஏலம், மிளகு, பட்டை, கராம்பு, இஞ்சி, திப்பலி, சுக்கு, பெரும்சீரகம் பொடியாக தேநீருடன் கலந்து இருமலுக்குக் குடிப்பார்கள்.



கிறீன் ரீ, பாவற்காய் டயபற்றிஸ் ரீ,  ஹேபல் ரீ, வல்லாரை ரீ எனப் பலவும்
பைக்கற்களில் கிடைக்கின்றன.

மாதேவி

இராசவள்ளி டெசேர்ட்

$
0
0
சுவையான பல சிற்றுண்டிகளைச் செய்வதற்கு ஏற்ற ஒரு கிழங்குதான்  இராசவள்ளிக் கிழங்கு ஆகும்.


 இதில் பல வகைகள் உள்ளன. கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயுள்ள சதைப்பகுதி ஊதா, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.
 
இலங்கையில் ஊதா நிற இராசவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது.

முளையை நட்ட ஒரு மாதத்தில் முளைத்து வளர ஆரம்பிக்கும். இலைகள் வெற்றிலைபோல இருக்கும் தண்டு அழகிய ஊதா நிறத்தில் இருப்பதால் கொடி அனைவரையும் கவரும்.

கொடிகள் வளர்ந்துவர பட்டமரக் கொப்புகள் அல்லது மூங்கில் தட்டிகள் வைத்துப் படர விடுவார்கள். இரண்டு மாதத்தில் களைகள் பிடுங்கி மண் அணைத்து விட வேண்டும்.


இலைகள் மஞ்சள் நிறம் கலந்து பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கும்போது நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும் அப்போது அறுவடைசெய்து கொள்ளலாம். வீட்டுத்தோட்டங்களில் நாட்டிக் கொள்வார்கள். நவீனத்தில் பூச்சாடிகளில் வளர்த்து பல்கனிகளில் அழகுக்குப் படரவிடுவதுடன் கிழங்கும் பெறலாம்.

விநாயக ஷஷ்டி இருபது நாட்களும் கோவில்களில் விநாயகருக்கு நாள்தோறும் ஒரு நிவேதனம் படைக்கப்படும். அதில் இக்கிழங்கும் ஒருநாள் படைக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றது. சர்க்கரை வள்ளிக் கிழங்கைப்போல இதில் இனிப்பு அதிகம் கிடையாது.

தாவரவியில் பெயர் Dioscorea  alata  ஆகும். இதில் water yam,  winged yam,  purple yam என மூன்று வகைகள் உண்டு. தெற்கு ஆசியாவில் முதன்முதல் பயிரிடப்பட்டது. 

பிலிப்பைன்ஸ் இல் Ubeஎன்கிறார்கள். பலவிதமான இனிப்பு டெசேட்களில் பயன் படுத்துகிறார்கள். 

வியட்னாமில் khoaimoஎன்பர். பிரதானமாக சூப்பில் கலக்கிறார்கள். இந்தியாவில் ratalu  அல்லது violet yamபெருவள்ளிக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். 

ஹவாயில் Uhi  என அழைப்பர். 


இலங்கையில் இராச வள்ளிக் கிழங்கு என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.

போசனை

100 கிராமில் 20.6 கலோரி, புரதம் 1.4 கி, கொழுப்பு மிகக் குறைவு 0.2 கி, நார்ப்பொருள் 8.8 கி, நீர்ப்பிடிப்பு 72.4 மி.லி, பொட்டாசியம் 256 மி.கி, மக்னீசியம் 15 மிகி, கல்சியம் 15 மிகி, சோடியம் 9 மிகி, இரும்புச் சத்து 0.8மிகி. Zinc 0.3 மிகி. B3 0.2மிகி, விட்டமின C 15மிகி வரையே இருக்கிறது.

கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும், Antioxidant அதிகம் இருப்பதும் இதன் நன்மைகளாகும். ஓஸ்டியோபொரோசிஸ் சைத் தடுக்கும் தன்மையும் இருப்பதாக நம்பப்படுகிறது.

எங்கள் பாட்டி இக்கிழங்கை சீவி எடுத்து பொரித்து ஒருவகை சிப்ஸ் செய்து தருவார்.

கிழங்கை அவித்து மசித்து சர்க்கரை தேங்காய்ப் பால் விட்டு கட்டியாக வருவதற்காக  உழுந்துமா கலந்து கிளறி ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறுவார்கள்.

டெசேர்ட்


தேவையான பொருட்கள்.


கிழங்கு – ½ கிலோ
சீனி – 4 - 5 டேபல் ஸ்பூன்
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபல் ஸ்பூன்
முந்திரி பிளம்ஸ் சிறிதளவு.
உப்பு - சிறிதளவு.
ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள்.

செய்முறை –


சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள்.
நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள்.

சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவி  நன்கு ஆறவையுங்கள்.

ப்றிச்சில் குளிரவைத்துப் பரிமாறுங்கள். கலர்புல் டெசேட் காணாமல் போய்விடும். மியா மியாப் பூனைகளும் வந்துவிடும்.  

மாதேவி

சின்னுவின் ஹொஸ்டல் சமையல்- ரவை கேசரி

$
0
0
அடைக்கலம் குருவிக் குஞ்சுகளாய் அணைப்பில் வளர்ந்து, சிறகு முளைத்ததும்  சிட்டுக் குருவிகளாய் வீட்டினுள் சிறகடித்துப் பறந்து திரிந்த காலங்கள் இனியவை.


காலம் மாற, சிறகு விரித்து வானத்தையும் வெற்றி கொள்ளப் பறக்கும் காலம் வந்ததும், உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரத்தானே செய்யும்.

பலருக்கும் வந்தது. எங்கள் வீட்டிலும் வந்தபின்தான் புரிந்தது.

“மம்மி டடி நான் சமாளிப்பேன். என்னை விட்டிட்டு இருப்பீர்களா? தனிய என்ன செய்வீர்கள்?” கேள்விகள் வந்தன. பல மாறுவேடங்களிலும் கேள்விகள் வந்தன.


நான் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஹொஸ்ரல் வாழ்க்கை வாழ்ந்தவளல்ல. சின்னுவின் கேள்விகளால் என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

ஆரம்பத்தில் தினந்தோறும் தொலைபேசி,குறுந்தகவல்கள் எனப் பறந்த வண்ணம் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளின் படிப்பை குழப்பக்கூடாது என்பதற்காக நாளடைவில் தினந்தோறும் என்பதைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

எப்பொழுது விடுமுறை வரும் என ஆவலுடன் காத்திருப்போம்.  

உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரும்போது அப் புதிய சூழலுக்கு தம்மை மாற்றிக்கொள்வது என்பது சிலருக்கு இலகுவாகவும் பலருக்குத் துயரமாகவும் மாறிவிடுவதுண்டு.

இவ்வகையில் சவாலுடன் தன்னைத்தானே கொண்டு நடத்தி பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தீர்மானங்கள் எடுத்து நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் தான்.

உங்கள் வாழ்க்கையிலும் வந்திருக்கலாம் இனிமேலும் வரலாம்.

எங்களுக்கு வந்தது.


ஓரிரு பாத்திரங்களுடன் சமையல் செய்வது இலகுவானதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதுவும் ஹொஸ்டலில் பொதுவான கிச்சனில். நாலுஅடுப்புக்கள் கூடிய எலெக்ரிக் குக்கரில் இருபத்தைந்து பெயர் சமையலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சமையல் என்பது கிரிக்கற் மச்சில் பந்தைப் பிடிக்க ஓடும் ஓட்டம்தான்.

முதல்கட்டம் சமையலுக்கு தயாராகுமுன் கூடையில் சமைக்கும்பொருட்கள், பாத்திரங்கள் யாவற்றையும் மறக்காமல் எடுத்துவைக்க வேண்டும்.

அடுத்து கிச்சனில் அடுப்பு பிரீயாக இருக்கிறதா எனப் போய்பார்க்க வேண்டும். ப்ரியாக இருந்தால் உடனே விரைந்து சென்று கூடையை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சற்றுத் தாமதமானால் அடுப்பில் வேறொருவர் தனது பாத்திரத்திற்கு முடி சூட்டிவிடுவார். 

ப்ரியாக இல்லாவிட்டால் சமைத்துக் கொண்டிருப்பவர்களிடம்; சொல்லி அடுப்பு முன்பதிவு செய்துவைக்க வேண்டும். அடிக்கடி சென்று ப்ரீயாகிவிட்டதா எனப் பார்த்தும் வர வேண்டும்.

பானில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து அடுப்பில் வைக்கச் சொல்லிவிடுவார்கள். எல்லாம் ரன் அவுட் ஆனபின் வந்த எக்ஸ் பீரியன்ஸ்தான்.  இப்பொழுதெல்லாம் சிக்ஸர் அடிக்க தருணத்தில்  மொபைலில் அழைத்துக் கொள்கிறார்கள்.

இப்படியாக சிரமத்தின் மத்தியில் தயாரிக்கும் உணவுகள்தான் இவை.

கூடையில் ஏதாவது பொருட்கள் வைக்க மறந்து அறையில்சென்று எடுத்துவர நேர்ந்தால் கூடையில் உள்ள எண்ணைப்போத்தல் அல்லது முக்கியமான பொருள் கால் முளைத்து யார் கூடவோ ஓடிப்போயிருக்கும்.

சிலநேரங்களில் பாத்திரங்களும் சுடப்பட்டு புது அறைக்கு குடிபோயிருக்கும். அன்று சமையல் அம்போ ஹோட்டல் சாப்பாடுதான் கிடைக்கும். 

வீட்டில் ஒம்லட் தவிர வேறு எதுவுமே செய்யத் தெரிந்திராதவள் சின்னு…? 

சிறுபிள்ளை என நாமே எல்லாவற்றையும் செய்து கொடுத்து விடுவோமே பிறகு எப்படி அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். 


இப்பொழுது படிப்பு, சமையல், வோசிங், கிளீனிங் என சகலதிலும் அசத்துகிறாள்.

ஐ ஆம் வெரி ப்ரவுட் ஆப் மை டியர் சின்னு.

சின்னு தனது சமையல் படங்கள்  அனுப்பி இருந்தாள். அவளின் ஹொஸ்ரல் சமையல் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பச்சலஸ்களுக்கும் உதவியாக இருக்கும்.

இனிப்புடன் ஆரம்பிப்போம். அனைவருக்கும் தெரிந்ததுதான். ஹொஸ்டல் இனிப்பு  அமிர்தம்தான்.

ரவை கேசரி படைப்போம்.

தேவையானவை

ரவை – 1 கப்
தண்ணி – 1 கப்
பால் - 1 கப்
சீனி – 1 ½ கப்
நெய் அல்லது மாஜரின் - 4 மேசைக்கரண்டி
கலர் பவுடர் அல்லது கலரிங் சிறிதளவு
ஏலம் அல்லது வனிலா சிறிதளவு
உப்பு சிறிதளவு
சாப்பிட்டு மிஞ்சிய பாதாம் அல்லது முந்திரி சிறிதளவு
பிரிச்சில்  கிடந்த ஜெலி.

செய்வோம்

1 டேபல் ஸ்பூன் நெய்யில் பிளம்ஸ் முந்திரி இருந்தால் வறுத்து எடுங்கள். அதே தாச்சியில் லேசாக ரவையை வறுத்து எடுத்து வையுங்கள்.

அதே பாத்திரத்தில் பால் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள் கலர் பவுடர் சேருங்கள்.

கொதித்துவர ரவையை சேர்த்து கிளறி சற்று வேக விடுங்கள்.
சீனி, உப்பு  கலந்து இறுக வனிலா மாஜரின் விட்டு கிளறி இறக்குங்கள்.

சட்டியுடன் தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிரிச்சில் இருந்து எடுத்த ஜெலி பாதாம் மேலே வைத்துச் சாப்பிடுங்கள். உங்கள் நெருங்கிய நண்பிகளுக்குக் கொடுங்கள். மிகுதியை பிரிஜ்ஜில் ஒளித்து வைத்துவிடுங்கள் நாளை பசிக்கும்போது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

சின்னு.

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

$
0
0
கரணை

Discoreaceae  குடும்பத்தைச் சேர்ந்தது. பலநாடுகளிலும் பல்வேறு இனங்களில் பயிரிடப் பட்டு வருகிறது.இவற்றில் 200 க்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.


இலங்கையில் சட்டிக் கரணை அல்லது கரணைக்கிழங்கு எனவும் அழைப்பார்கள். இந்தியாவில் சேனைக்கிழங்கு என்கிறார்கள். மேல்தோல் மண்நிறத்தில் இருக்கும்.

ஆங்கிலப் பெயர் Elephant foot yam. யானையின் பாதம் போல பெரியதாக, சொரசொரப்பாக,  சட்டியை  போலவும், தோற்றமளிப்பதால் யானைப் பாதக்கிழங்கு Elephant foot yam.என அவர்களும் சட்டிக்கரணை என நாமும் அழைப்பது பொருத்தம் போலவே தோன்றுகிறது.

மரவள்ளி. வத்தாளை, மோதகவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு. இராசவள்ளிக் கிழங்கு, சிறுவள்ளிக் கிழங்கு போல இதுவும் ஒருவகை.   மஞ்சள் பயிரிடப் பட்ட தோட்டங்களில் வரம்பில் சேனை பயிரிட்டு இரட்டிப்புப் பலன் பெறலாம். இரண்டின் காலமும் ஒரேஅளவானது என்கிறார்கள். 


பயிரிடப் பட்டு 8 - 10 மாதங்களில் பலன் கொடுக்கும். சிறப்பான விடயம் விளைந்தபின் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து உபயோகிக்க முடியும். மழைக்காலத்திற்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். தோல் கடிக்கும் தன்மையுடையது.

முதன்முதல் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பயிரிடப் பட்டது என்கிறார்கள். மேற்கிந்திய பசுபிக் தீவுகளிலும் பயிரிடப் படுகிறது. காபோவைதரேற் அதிகமுள்ள உணவு இது. நார்ப் பொருள், பொற்றாசியம், மக்னீசியம், விற்றமின் சி அடங்கியுள்ளது. கொழுப்பு குறைந்த உணவு என்பதால் நல்லஉணவு. கொலஸ்ரோலைக் கட்டுப் படுத்தும் உடல்எடையையும் அதிகரிக்காமல் தடுக்கும்.

இன்று கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு செய்யலாம். எண்ணை தவிர்க்க விரும்புவோர் அவித்தெடுத்து சமைத்தபின் எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டுங்கள்.

இக்கிழங்கில் சிப்ஸ், தேங்காய்ப் பால் பிரட்டல், கூட்டு, அவியல், பொரியல், வறுவல், பொடிமாஸ், புட்டு, சாப்ஸ், கட்லட், வடை, எனப் பலவும் செய்து கொள்ளலாம்.



கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள் -

கரணைக்கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
வெந்தயம் - ½ ரீஸ்பூன்
கடுகு – ¼ ரீஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்.
மிளகாய்ப் பொடி – 1 ரீஸ்பூன்
தனியாப் பொடி - 1 ரீஸ்பூன்
சீரகப்பொடி  - ½ ரீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 2 டேபல் ஸ்பூன்

வறுத்து பொடித்து எடுக்க– கறுவா, சோம்பு, கராம்பு
பொரிக்க எண்ணை - 4 -5 டேபல் ஸ்பூன்
புளி – தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தண்ணி – ½ கப்.

கிழங்கு கடிக்கும்!
பல்லு இருக்கா என்று கேட்காதீர்கள்.

சொரசொரப்பு என்பதால் கிளவுஸ் போட்டு கிழங்கின் தோலை சீவி எடுங்கள். துண்டங்களாக வெட்டி நன்கு கழுவி எடுங்கள்.
மெல்லிய சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

இதன் பின் கிளவுஸ் களட்டிக்கொள்ளலாம்.
கையில் எலுமிச்சம் புளி அல்லது எண்ணை தடவியும் வெட்டலாம்.

வெங்காயம்,பூண்டு சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை கீறிவையுங்கள்.

வெறும் தாச்சியில் வறுக்க வேண்டியதை வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொரிக்கும் எண்ணையை விட்டு வெட்டிய கிழங்குகளைப் போட்டு மெல்லிய ப்ரவுண் நிறத்தில் பொரித்தெடுத்து வடிய வையுங்கள்.

சிறிது ஒயிலில் கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேற்பிலை தாளித்து இறுதியில் வெந்தயம் சேர்த்து சிவத்ததும் இறக்கி பிரஷர் குக்கரில் கொட்டுங்கள்.

பொரித்த கிழங்கு, பொடிகள், உப்பு, புளி, தண்ணி, தேங்காய்ப் பால் அனைத்தையும் விட்டு கலக்கி மூடிபோட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு மூடி திறக்க முன்பே கமகமக்கும்.
ஆற எடுத்து பரிமாறும் கோப்பையில் விடுங்கள். நன்கு அவிந்த மிகவும் மெதுவான கரணைக்கிழங்குக் குழம்பு விரைவில் காலியாகிவிடும.

(கிழங்கு பிஞ்சாக இருந்தால் பொரித்தபின் குழம்பை பிரஷர்குக்கரில் வையுங்கள். முற்றிய கிழங்கு என்றால்பொரித்த பின் பாத்திரத்தில் வைத்தும் எடுக்கலாம்.)


காரகுழம்புடன் சுவைசோ்க்க இனிப்பு பூசணி, இரும்புச்சத்துக்கு இலைப் பொரியல், ரசம் அல்லது மோருடன் சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

கனவாகிப்போன அடுக்களைப் பொருட்கள்

$
0
0
சமையலறையை யாழ் தமிழில் அடுப்படி மற்றும் அடுக்களை என்றும் சொல்லுவார்கள்.


குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.


அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்.


நிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு பலகை ஆசனங்கள் வைத்திருந்தனர். பலகைக் கட்டை என்பர்.

மரத்தாலான அகப்பைக்கூடு துளைகள் உள்ளது தொங்கவிடப் பட்டிருக்கும். அகப்பை, மத்து ,கரண்டி, தட்டகப்பை, போன்றவற்றை அவசரத்திற்கு எடுப்பதற்காகச் செருகி வைத்திருப்பர்.

அகப்பை கூடு

வெண்கலம், ஈயம், அலுமினியப் பொருட்களின் பிற்பாடு எனாமல் பூசப்பட்ட பாத்திரங்கள் பாவனைக்கு வந்தன.

கறிக் கோப்பைகள், பேசின், ரிபன் கரியர், கேத்தல், பிளேட்ஸ், ரீ யக் ( Jug )    ரீ பொட்; (Pot)இருந்தன. பல வர்ணங்களில் அழகாய் இருந்தன. ஒரே ஒரு குறை  நிலத்தில் விழுந்து அடிபட்டால் எனாமல் எடுபட்டு அசிங்கமாகும். பின்னர் அவ்வடத்தில் பாத்திரத்தில் ஓட்டை வந்து விடும்.




சீன தயாரிப்புப் பீங்கான் பிரபலமாக விற்பனைக்கு வந்தது. சுத்தம் செய்வது இலகு என்பதால் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டனர். இவற்றில் ரீசெட், டினர்செற் பிரபலமாக அறிமுகமாகி இருந்தது. இப்பொழுதும் வீடுகளில் இடம் பிடித்து இருக்கிறது.



அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்.


ஸ்ரெயின்லெஸ் பாத்திரங்கள் வந்தன. இதற்கு ஏகக் கிராக்கி இருந்தது. மெலமின்கோப்பைகள்அறிமுக மாயின. 

இதைத்தொடர்ந்து பைரக்ஸ் அவன் (oven)பாத்திரங்கள் பிரபல்யம் ஆகியது. நொன்ஸ்ரிக் சமைக்கும் பாத்திரங்கள், மைக்ரோ பாத்திரங்கள், என பல்வகையும் உபயோகத்தில் இருக்கின்றன.       

அரிக்கன் லாம்பு (விளக்கு)
இரவில் வெளிச்சம் ஏற்ற கைவிளக்கு, குப்பி விளக்கு, அரிக்கன் விளக்கு, வைத்திருப்பார்கள்.


நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்.


மண்ணெண்ணை லீற்றர் 250ரூபா விற்றது. அதுவும் கிடைப்பதற்கு அரிது. கண்ணாடி (ஜாம்) போத்தலின் அடியில் தண்ணீரை விட்டு அதன்மேல் தேங்காய் எண்ணை சிறிதளவு ஊற்றி சைக்கிள் ரியூப் வாலில் திரியைச் செருகி விளக்கு எரித்திருக்கிறோம். மேலே கம்பிகட்டி கைபிடியும் இருக்கும் எடுத்துச்செல்வதற்கு.

காஸ்,மின்சாரம், இல்லாதகாலம் விறகு அடுப்பொன்றும் அக்காலத்தில் புதிதாக அறிமுகமாகி அனைவருக்கும் கைகொடுத்தது.


இரு அடுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பக்கத்தே தொடுத்ததாய் இருக்கும் முன்பகுதியில் எரித்தால் பக்கத்திலே சற்று உயர உள்ள சிறிய அடுப்பிலும் சூடுபரவி இரண்டு சமையல் செய்யலாம்.அத்துடன் விரைவில் சமையலும் முடியும்.

கைக் கோடரி

விறகு தட்டுபாடான காலம் அது. . மறக்கக்கூடியவையா இவை எல்லாம்.  

சமைப்பதற்கு ஆதியில் விறகு அடுப்பு. நிலத்தில் மூன்று கல்லை வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்துச் சமைப்பர்.

கல்லடுப்பு

பின் களிமண்ணால்  அடுப்பு பிடித்து வெப்பத்திற்கு உடையாதிருக்க அதன் மேல் சாணம்பூசி வைத்திருப்பார்கள். குமட்டி அடுப்பும் இருந்தது.

இரும்பு அடுப்பு

குமட்டியில் தணலைப் போட்டு சமைத்த குழம்பை ஆறாமல் வைத்திருப்பார்கள். மரத்தூள் அடுப்பும் தகரத்தால் செய்யப் பட்டது இருந்தது. மரத்தூளை அடைந்து எரியவைத்துச் சமைப்பர். 

பின் இரும்பால் செய்த அடுப்புக்களை வைத்து சீமேந்தால் பூசிக் கட்டினார்கள். காலப் போக்கில் இவை வெப்பத்தால் வெடிக்கத்தொடங்கின. அத்துடன் மண்ணெண்ணை பாவனைக்கு வர இவையும் இல்லாது போயின.

மண்ணெண்ணை ஸ்ரவ், குக்கர், பாவனையில் இருந்தது. ப்ரஷர் குக்கர், ப்ரிஜ் வந்தன. இலகு மின்சார அடுப்புகள் வர  பலரும் மின்சார, காஸ் அடுப்புகளுக்கு மாறினர். ரைஸ்குக்கர் குடியேறியது.

அம்மி
கல்லாலான ஆட்டுக்கல்லு, அம்மி, தோசை, இட்லி மா, சட்னி, மசாலாச் சரக்கு, அரைப்பதற்கும்.
ஆட்டுக்கல்லு


திரிகை, பயறு, உழுந்துமா திரிக்கவும், உடைக்கவும் பயன்பட்டன.

உரல், உலக்கை அரிசி குத்தவும். மா இடிப்பதற்கும் உபயோகித்தனர்.
 
திரிகை
 இலங்கையில் விசேடமாக இடிசம்பல் இடிப்பதற்கும், பனம்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, துவைக்கவும்; பயன்பட்டன.


பின் விறாந்தையில் கல்லுரல், திரிகை

மிக்ஸி, கிரைண்டர், அரங்கேற கல்லுரல்கள் வீட்டின் பின் விறாந்தைகளில் தஞ்சம் புகந்தன. காலம் போக பின்புறம் வாழைப்பாத்திகளுக்குள்ளும் உட்கார்ந்திருந்து அழுதன..

இன்னும் சில கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் 

பழையன ஒழிந்து சமையலறையும் புதுப்பொலிவுடன் கிச்சன் யூனிற் பூட்டப் பட்டு புதுப்பொலிவு பெற்றன. தூசி தட்டும் ஒட்டடைக் கம்புக்கும் வேலை இல்லாது போய் விட்டது. வக்கூம் க்ளீனரும் வந்தது.

இப்பொழுது மின்சார . காஸ்அடுப்புகளுடன். சூரிய அடுப்பு, மைக்ரோ. இன்டெக்சன் என பவனி தொடர்கிறது….

டிஸ்வோசர் பூட்டப் பட்டு கிச்சன் அழகிய மாளிகையாகியது. மாளிகையில் அழகிய பொருட்கள் கண்ணைச் சிமிட்டிநிற்கின்றன…

சமையலோ பல வீடுகளில் அம்போ…. ஆகிவிட்டது.

ரெஸ்ரோறன்ஸ் பக்கற்றுகள் ப்ரிஜ்ஜில்அடைக்கப்பட்டு மூச்சுத்திணறி… மைக்ரோவில் சூடேறி பலவீட்டு டைனிங் டேபல்களில் சிரித்திருக்கின்றன……

இமயமலை அடிவாரச் செடியில் எமது வீட்டில் பால்கறி

$
0
0
உச்சாணிக் கொப்பிலே உலக்கை கட்டித் தொங்குது!

அது என்ன?

அவர் இவர்தான்.

அனைத்து மண்ணிலும் வளரக் கூடிய மரம். சிறப்பாக வரட்சியான மணற்தரையில் சிறந்த பயன் தரும். இது 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. அதிக கிளைகளைக் கொண்டிருக்கும்.


வீ ட்டு வேலிகளிலும், முற்றத்திலும், கொல்லையிலும் நாட்டி இருப்பார்கள். தோட்டங்களிலும் பயிரிடப் படுகிறது. ஆறுமாதத்தில் பலன் கொடுக்கும்.


மரத்தின் பூர்வீகம் இமயமலையின் அடிவாரம் என்கிறார்கள். பின்பு பங்களாதேஸ், பாகிஸ்தான், அப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா,  இந்தியா,  இலங்கை எனப் பரவி தாய்லந்து, தாய்வானிலும் பயிரப்படுகிறது.

Moringa ceae குடுப்பத்தைச் சேர்ந்தது. MoringaOleifera என்கிறார்கள். கோடையில் தாரளமாகக் கிடைக்கும் காய் இனம் இது. மழை இதற்கு எதிரி. விளைச்சல் பாதிக்கப்படும். பூக்களை உதிர்க்கும்.

இதில் சிறிய கட்டைக் காய் இனம், ஒரு மீட்டர் வரை நீண்ட காய் இனம், களிக்காய் என மொத்தமான காய்,  எனப் பல புதிய ரகங்கள் இருக்கின்றன.

செடி இனம். விதை வைத்துப் பயிரிடப்படும். ஏனையவை கொப்புகளை வெட்டிப் பதியிட்டு வளர்ப்பர்.

  • பெங்காளியில் shojne,  
  • தெலுங்கு Munagakaya,  
  • தமிழ் முருங்கைக் காய். 
  • மலையாளம் Muringa.   
  • ராஜஸ்தானியில் Shenano,  
  • பிலிப்பினோ Malunggay.

100 கிராமில் கொழுப்பு 0.1 கிராம், காபோஹாரேட் 3.7 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், புரதம் 2.5 கிராம், விற்றமின் C 120 மி.கிராம். விற்றமின் A 110 மி.கிராம், கல்சியம் 30 மி.கிராம்,

இதில் பலவகையான பைரோநியூரியன்டஸ் (Phytonutrients)பல உண்டு. Alpha-carotene, Beta-Carotene, Beta-cryptoxanthin, Lutein, Zeaxanthin and Chlorophyll. இவை உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் 46 மேற்பட்ட வகையான ஒட்சிசனெதிரிகள் (antioxidants)இருக்கின்றன.

மரத்தின் இலை, பூ, பட்டை என சகலதுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தக் கூடியது. மருத்துவப் பொக்கிஸங்கள் என்கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் நரம்புத் தளர்ச்சிக்கும், பசியின்மைக்கும் அருமருந்து என்கிறார்கள்.

குழம்பு,  வரட்டல்,  சாம்பார்,  தீயல்,  கூட்டு,  பொரித்த குழம்பு, முருக்கைக்காய்ப் பிரட்டல், காரக் கூட்டு முருக்கைக்காய்சரக்குத் தண்ணி - பத்திய உணவு, சூப்,  கட்லட்,  வடை,  வடகம்,  பொரியல்,  சாதம்,  அசைவம் கலந்த குழம்பு, மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதிஎனப் பல வகையாக சுவை கொடுக்கும்.


தேங்காய்ப் பால்கறி
தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 2
பலாக்கொட்டை - 10
கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 6-7
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
தேசிப்புளி  -1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - 1 இலை
உப்பு தேவையான அளவு

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 1
கறிவேற்பிலை -1 இலை
எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


காயை விரலளவு துண்டங்களாக வெட்டி தோலை சீவி எடுங்கள். துண்டுகளை முக்காற் பாகம் வரை கீறிவிடுங்கள். 

பலாக்கொட்டையின் மேல்தோலை நீக்கி எடுத்து நீளவாட்டில் இரண்டாக வெட்டுங்கள்.

கிழங்கை தோல் சீவி விரும்பியபடி துண்டங்களாக வெட்டி மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நீள் துண்டுகளாக வெட்டிவிடுங்கள்.

பாத்திரத்தில் காய்களைப் போட்டு கிழங்கு பலாக்கொட்டை மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு, 5 நிமிடங்கள் அவியவிடுங்கள்.

பின்பு பிரட்டி மூடிவிடுங்கள். 2 நிமிடத்தில் திறந்து தண்ணீர் வற்றிய பின்  தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வர இறக்கி தேசிப்புளி விடுங்கள். பிரட்டிவிடுங்கள்.

தாளித்து கலந்துவிடுங்கள்.

( பத்தியக் கறியாகத் தயாரிக்கும்போது தாளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்  )

முருங்கையின் பயன்கள் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய கீழே யூ ரியூப் கிளிக் பண்ணுங்கள்
முருங்கை அற்புதத் தாவரம்.

:- மாதேவி-:

பூக்களைப் பறியுங்கள்

$
0
0
இயற்கையின் படைப்பில் பூக்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைத் தருகின்றன.

பூ என்றாலே அழகு, மென்மை, நறுமணம், கவர்ச்சி என்பன அடங்கியனவாக இருக்கின்றன.


பூக்கள் அழகுடன் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன.

மலர்களில் சிலவற்றை உணவுகளாகவும் நீண்ட காலங்களாக உட்கொண்டு வருகின்றார்கள்.

எல்லோரும் முகம் சுழிக்கும் வேப்பம்பூ, வாழைப்பூவுடன், இனிய பூசினிப் பூ, சிவப்பு செவ்வரத்தம் பூ, கற்றாழைப்பூ, வெங்காயப்பூ, குங்குமப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ, ஆவாரம்பூ எனப் பலபல தொடரும்.

'ரோஜா.. ரோஜா.. ரோஜா... ரோஜா......' மயக்கும் ரோஜாவும் சமையலில் இடம் பிடிக்கும் கேக், புடிங், பானங்கள், ரோஸ் வோட்டர், எசேன்ஸ், எனக் கலக்கும்.


காலிப்ளவர் ,கோவா போன்றவற்றையும் பூ இனம் எனக் கொள்ளலாம்.

ஆங்கிலேய மரக்கறிகளில் புறக்கோலி, கோவா, கூனைப்பூக்கள் (artichokes)> , காளன், Broccoli rabeஇலையும் பூக்களும் சாப்பிடக் கூடியன. இன்னும் பலவும் அடங்குகின்றன.

புறக்கோலி

இவ் இனம் ஏறத்தாள 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது.


இதில் பல உப இனங்கள் உள்ளன.


நூறு கிறாமில் புறக்கோலியில் காபோகைதரேட் - 6.64 கிராம், நார்பொருள் - 2.6 கி, கொழுப்பு – 0.37 கி, புறோட்டீன் - 2.82 கி, கல்சியம் - 47 மி.கிராம், மக்னீசியம் - 21 மி.கிராம், விற்றமின் சி – 89.2 மி.கிராம், அடங்கியுள்ளன.


சலட், சூப், ஸ்டிம் என பல வகை தயாரிப்புகளாக உணவில் சுவைக்கும்.

காலி ப்ளவர்


  • இதில்உள்ள வேதிப்பொருள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டுள்ளன.
  • நிறமி புற்று நோயைத் தடுக்கும் என்கிறார்கள். 

சூப், மஞ்சூரியன், கூட்டு.... பஜ்ஜி, சப்பாத்தி, பகோடா என...சகலவிதமாகவும் மட்டன், சிக்கன், இறால், முட்டை... எனக் கூட்டுச்சேர்ந்தும் சுவைக்கும்.

கோவா

வளமுள்ள எல்லாவகை மண்ணிலும் வளர்ந்து பயன் தரக் கூடியது.


நீர்தேங்கி நிற்காதிருக்க வடிகால் வசதியிருக்க வேண்டும்.


மலைப் பகுதிகளில் 150 நாட்களில் 1 ஏக்கருக்கு 70 – 80 டன்களும் சமவெளிப் பகுதியில் 120 நாட்களில் 1 ஏக்கருக்கு 25 – 35 டன்களும் பயனாகக் கிடைக்கும்.


மாடியில் வீட்டுத் தோட்டமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாம்.


  • விற்றமின் சி,டீ (Vit C,D) அடங்கியுள்ளது. 
  • ஒரு கப் Cabbage ல், கொழுப்பு 0.5 கிராம், காபோஹைாதரேட் 5 கிராம், நார்ப்பொருள் 1.8 கிராம், கல்சியம் 41.1 மிகி, பொட்டாசியம் 218.9 மிகி, சோடியம் 16 மிகி,
இதிலும் பல இனங்கள் உள்ளன. 

பிரட்டல், ஸ்டீம் சலட், பால்க்கறி, பொரியல், சம்பல், தொக்கு எனப பலவகையாய் செய்து கொள்ளலாம். புட்டு, நூடில்ஸ், ரைஸ் இவற்றுடன் கலந்தும் தயாரிக்க சுவை சேர்க்கும்.

    குங்குமப்பூ Saffron

    செம்மஞ்சள் நிறத்தை உடையது. இந்தியாவில் கஸ்மீரில் பயிராகிறது.


    வாசனையோடு இருக்கும். மருத்துவ குணமுடையது.


    இதை உலர வைத்து, உணவுகளில்
    • வாசனை ஊட்டியாகவும், 
    • நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.
    இன்னமும் பூக்களைப் பறியுங்கள்.

    சின்னுவின் சமையலறையில் பூக்கள் மீண்டும் சுவைக்கும்

    :- மாதேவி -:

    0.0.0.0.0.0.0.0.0

    தீபாவளி விசிட் வாங்களேன்.

    $
    0
    0
    தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்


    பாடலுடன் சுவைத்திடுங்கள் திருநாளை.....


    பாட்டுக் கேட்ட அனைவருக்கும் 
    இப்பொழுது தீபாவளி சுவீட்ஸ் தயாராக இருக்கு 
    சாப்பிட வாங்க.


    எள்ளுப்பாகு எடுத்துக் கொள்ளுங்கள். 
    தித்தித்து மகிழுங்கள். 
    எள்ளு கொள்ளு எல்லாம் 
    ஆரோக்கியத்திற்கு நல்லதாமே !!



    பயித்தம் பணியாரம் சுவைத்திடுங்கள்.


    பனங்காய்ப் பணியாரம். 
    எங்க யாழ்ப்பாணத்து பனம் பழத்தில் செய்ததில் 
    அதன் சுவையே தனிதான்.



    இனிப்புகள் சாப்பிட்ட வாயிற்கு 
    சற்று சுவை மாற 
    கார சிப்ஸ் தருகின்றேன்.



    நொறுக்கி உண்ண 
    முறுக்கு இருக்கு 
    மறுக்காது உண்ணத் 
    தோன்றுகிறதோ?


    மசால்வடை இல்லாமல் 
    பண்டிகை இருக்குமா?



     எமது ஊர் தட்டைவடை செல்லாத உலகநாடுகள் இருக்கின்றனவா ? 
    நீங்கள் சுவைக்க 
    இதோ தருகின்றேன்.


    தின் பண்டங்கள் வேண்டாம் என்பவர்களுக்கு 
    பழச் சுவை விருந்து 
    காத்திருக்கு. 

    சுவைத்த அனைவருக்கும் மாதேவியின் நன்றிகள்.

    கோடைக்கு நுங்கு பதநீரும் வாய்ருசிக்கு பனம் பட்சணங்களும்

    $
    0
    0
    பனை. இது வெட்ப வலயப் பிரதேசத்திற்கான தாவரம் . இயற்கையாகவே வளரும். புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.


    கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம், கற்பகதரு என்கிறார்கள்.

    தேசிய வளங்களான தேயிலை இரப்பர் தென்னையுடன் பனையும்அடங்கும்.

    இளம் கன்றுகள் வடலி என அழைக்கப்படும்.


    பனைகள் உயர்ந்து 30 மீட்டர் வரை வளரும். உச்சியில் முப்பது நாற்பது வரையிலான விசிறி வடிவமான ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


    பொதுவாக பனைகளுக்கு கிளைகள் இல்லை. அபூர்வமாகவே கிளைப் பனைகள் காணப்படும். இது வல்லிபுரத்துக் கோவிலடிக் கிளைப் பனை.


    பனை விதை நாட்டப்பட்டு முதிர்வடைவதற்கு 15 வருடங்கள் வரை எடுக்கும். 20 வருடங்களின் பின்னர் வருடம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபா தொடக்கம் பதினையாயிரும் வரை வருமானத்தைத் தரும்.

    ஒரு பனையிலிருந்து நூறுக்கும் அதிகமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள். 20 வருடங்கள் முதல் 90 வருடங்கள் வரை பனைகள் மூலம் வருமானம் கிட்டும். மரத்தின் சகல பாகங்களும் பலன் தரக் கூடியன.

    பனை அபிவிருத்தி சபை ஒன்று இலங்கையில் 1978ல் உருவாக்கப்பட்டது. இதனால் பனம்பொருள் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

    ' தொப்பென்று விழுந்தான் தொப்பிகழண்டான் ' அவன் யார் ?  என்ற சிறுவயதில் நொடி விளையாட்டுக்களும் நினைவில் வந்து செல்கின்றதல்லவா.

    பனையிலிருந்து நுங்கு,சீக்காய், பனம் பழம் கிடைக்கும்.


    பனம் பழத்தை பாத்தியிலிட்டு பனங்கிழங்கு, பூரான், பச்சை ஒடியல், புளுக்கொடியல், பனாட்டு, பனங்காய் பணியாரம், பாணி, பதநீர், வினாகிரி, கள்ளு,  சாராயம், கல்லக்காரம், பனஞ்சீனி, பனங்கட்டி, கோடியல், ஜீஸ், ஜாம், எனப் பலவும் ஒடியல் மாவில் கூழ், பிட்டும், தயாரிக்கலாம்.

    பதநீர் உடலுக்கு குளிர்ச்சி என்பார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது என்பார்கள். பதநீரை எமது ஊரில் கருப்பணி என்றும் கூறுவர்.

    ஆனால் கள்ளு போதை ஏற்றும்.

    ""....நாடெலாம் கள்ளின் நாற்றம்
    நாற்றிசை சூழும் வேலிக்
    கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
    குடியர்கள் அங்கு கூடித்
    தேடிய பொருளை யெல்லாஞ்
    சிதைத்தவர் குடித்தலாலே...""

    இவ்வாறு யாழப்பாணத்தைத் தனது பெயரிலேயே சூடிக் கொண்ட மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் அன்று பாடினார்.

    பச்சை ஓலை ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குருத்தோலையை வெட்டி எடுத்து காயவிட்டு பெட்டி, பாய், தடுக்கு, கூடை, சுளகு, உமல், பனங்கட்டிக் குட்டான், நீத்துப்பெட்டி, கொட்டைப்பெட்டி, விசிறி, இடியப்பத் தட்டுகள், தொப்பி, அழகிய கைவினைப் பொருட்கள், கைப்பைகள் எனப்பலவும் தயாரிக்கின்றார்கள்.


    காய்ந்த ஓலைகள் வீட்டுக் கூரை மேயவும், வீட்டைச் சுற்றி வேலி அடைப்பதற்கும்  உதவுகின்றன.

    "காய்ந்தோலை விழக் குருத்தோலை சிரிக்கும் " என்ற பழமொழியும் தெரிந்தது தானே.


    மூரி மட்டையிலும் வேலி அடைப்பார்கள். பொதுவாக வெறும் காணிகளைச் சுற்றி வேலி அடைக்கவே மூரி மட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.

    பனையோலையின் காம்பு மிக நீண்டது. இது பனை மட்டை எனப்படுகிறது. காய்ந்த பின் அதனை மூரி மட்டை என்பார்கள்.


    அக்காலத்தில் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான துலா செய்வதற்கு பனை மரம் பயன்பட்டது.

    துலா. நன்றி:- கட்டற்ற கலைக்களஞ்சியமான ...
    ta.wikipedia.org

    கிணறு இறைக்க கிணற்றுப் பட்டையும் வைத்திருந்தார்கள்.

    ...பட்டையால தண்ணி வார்க்க துலாமிதிச்சுப் ...
    நன்றி:- newjaffna.com

    தும்புக் கைத்தொழில் தொழிற்சாலை இயங்கியது. காய்ந்த ஏனைய பாகங்கள் விறகுக்காகப் பயன்படும். வீடு கட்டும்போது வளை, தீராந்தி, பனஞ்சிலாகை எனவும் பலவாறு பனை மரம் உபயோகப்படுகிறது.

    ஆதிகாலத்தில் எமது அறிவையும், கல்வியையும் எதிர்காலப் பரம்பரையினருக்கு பாதுகாத்துக் கொடுக்கும் பொக்கிசங்களாக இருந்தவை ஏடுகளே. பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதில் எழுத்தாணிகளால் குறித்து வைத்தே எமது இலக்கியங்களும் பேணப்பட்டன.

    உ.வே.சா கண்டெடுத்த ஓலைச்சுவடிகள் சில இவை என
    ta.wikipedia.org சொல்கிறது.

    இப்போதும் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குவது எனச்சொல்வார்கள். அன்றைய நாளில் ஏட்டுச் சுவடியுடன் செல்வது நமது தொன்று தொட்ட வழக்கமாக இருந்துவருகின்றது.

    யுத்த காலத்தில், சென்றிப் பொயின்றுகளுக்காவும் பங்கர் மூடிகளுக்காகவும் பெரும் தொகையான மரங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
    இராணுவ காவலரண் நன்றி:- tamilswin.blogspot.com

    ஏவப்பட்ட செல்களின் தாக்கத்தால் தலையிழந்தன பெருமளவான பனைகள்.

    செல்வீச்சினால் தலையிழந்த பனைகள் மனிதர்கள் போலவே... நன்றி:- panoramio.com

    பனைகள் எங்கு தோன்றின என்பதற்கு சரியான சான்று இல்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம், இலங்கை இந்தியா, இந்தேனீசியா, தாய்லந்து, மலேசியா, மியன்மார், சீனா, வியட்நாமிலும், மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோவிலும் பனைகள் காணப்படுகின்றன.

    பனைச் சமையல் அடுத்த இடுகையில்..

    :- மாதேவி -:
    0.0.0.0.0.0.0

    பனம் பழத்தில் பதமான பணியாரம்

    $
    0
    0
    சிறுவயதில் பனம்பழம் சாப்பிடதில்லையா?

    மாம்பழமும் பனம்பழமும் யாழின் தனித்துவத்திற்கு அடையாளமான பழங்களாகும்.

    தின்னத் தின்ன ஆசை..

    பனம்பழம் நன்கு கனிய முன்னர் நுங்கு என அழைக்கப்படும். நுங்கை வெட்டி நுங்கை அதன் மூளில் வைத்துச் சுவைத்ததை என்றும் மறக்க முடியாது.

    முற்றிய சீக்காயை ஆசையால் நிறையச் சாப்பிட்டு வயிற்றுக் குத்து வந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

    சூப்பப் போறார் பனம் பழத்தை..

    ஏழைகளின் உணவாகவும் பனம்பழப் பொருட்கள் இடம் வகித்திருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது. பனம்பழம் துவர்ப்பும் இனிப்பும் கலந்த அலாதியான சுவையைக் கொடுக்கும்.

    பனம்பழத்தை பழமாகவும் அவித்தும் சுட்டும் உண்பார்கள்.  சுவைக்குப் பனங்களியுடன் புளியும் கலந்து சாப்பிடுவார்கள். சண்டைக் காலத்தில் சவர்க்காரம் ஆனை விலை விற்ற போது பனம்பழத்தை தோய்த்து உடைகளைக் கழுவிய காலம் நினைவுக்கு வருகிறது.

    கழுவிய உடைகளை உலரவிட்ட நேரம் மாடுகளும் அவற்றைச் சுவைத்துப் பார்த்தது பொய்க் கதையல்ல.

    பனம்பழக் காலத்தில் வீடுகளில் செய்யும் பனங்காய்ப் பணியாரம். ஓலைப் பெட்டியில் அமர்ந்து தென் இலங்கையில் உள்ளோர் சுவைக்கப் பயணமாகும். ரெயில் ஏறி பயணித்த காலமும் ஒன்று இருந்தது.

    இப்பொழுது இரயிலும் ஓலைப் பெட்டிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போய்விட்டன.

    கொழும்பில் பம்பலப்பிட்டி கற்பகம் பனம்பொருள் கடையில் பனம்பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இது பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படுகிறது.


    பனம் களியும் போத்தல்களில் கிடைக்கிறது.

    பனம்பழக் காலத்தில் புத்தளம், சிலாபத்திலிருந்து வரும் பனம் பழங்கள் ரூபா 100- 150 என கொழும்பில் விற்பனையாகும்.

    '....பச்சோலை சல சலத்து,
    நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
    பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!..'


    நம் ஊர் பனங்காணி

    என ஒளவையார் பனம்பழத்தின் அழகை அருமையாகப் பாடியுள்ளார்.

     '..சேரனும், சோழனும்,
    பாண்டியனும் ஒளவை சொற்படியே
    மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்..'


    எனச் சோமசுந்தரப் புலவர் என எமது பனம்பழத்தை விதந்து பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..

    இன்று நாம் செய்யப்போகும் பனங்காய்ப் பணியாரத்துக்கான களி யாழ்ப்பாணத்திலிருந்து எனது நண்பியின் அக்கா அனுப்பியது. பனங்காயைப் பிழிந்து களி எடுத்து காச்சி போத்தலில் நண்பிக்கு அனுப்பியிருந்தார்.

    நண்பியின் தயவால் கிடைத்த களியில் நான் செய்தது. பயணப்பட்டு வந்த களியில் செய்த பணியாரத்தின் சுவைக்கு ஈடு ஏதும் உண்டா.

    சென்ற வருடம் யாழ் சென்ற போது எமது தோட்டத்து பனம் பழத்தை கொழும்பு கொண்டுவந்து பணியாரம் செய்தேன். 

    செய்வோமா பணியாரம்.

    நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.

    துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம்.


    பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

    நார் வெட்டும் கைகள் பத்திரம்.

    வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.
    பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.

    அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.

    களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

    வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து  பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள்.


    இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.

    பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்

    பனங்களி - 1 கப்
    சீனி- ¼ கப்
    பொரிக்க எண்ணெய் - அரை லீட்டர்.
    அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா - ¼ கப்
    உப்பு சிறிதளவு.

    பனங்களியும் நான் சுட்ட பலகாரமும்

    செய்முறை

    காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
    தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

    ரிசூ பேப்பரில் போட்டு ஓயில் வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.

    மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும்.

    சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..


    குறிப்பு -
    • (மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
    • அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். 
    • மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப் பிடியாக இருக்கும்.
    0.0.0.0.0.0

    சமையலறையில் விடுகதைப் போட்டி

    $
    0
    0

    பரம்பரையாக நீண்டகாலமாக வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தவைதான் விடுகதைகள். பாட்டிமார்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க, சிந்திக்க வைக்க விடுகதை கூறுவார்கள்.

    ஓய்ந்திருக்கும் வேளைகளில் விடுகதைகளைச் சொல்லி  அவிழ்க்க முடியுமா என கேட்பதுண்டு. கணவன் மனைவி, காதலன் காதலியும் விடுகதைகளை ஒருவருக்கு ஒருவர் வீசி திக்குமுக்காட வைப்பதுண்டு.

    • நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள் இவற்றுள் விடுகதையும் ஒன்று எனச் சொல்லலாம். 
    • விடுகதைகள் ஓரிரு வரிகளில் மறைமுகமாக விபரித்து எடுத்துச் சொல்லப்படுபவை. 
    • சிந்தனையைத் தூண்டி வைப்பது இதன் நோக்கம்.
    விடுகதையை புதிர், வெடி, நொடி என்றும் சொல்லுவார்கள்.

    சில விடுகதைகள் சொல்கிறேன். உங்களால் விடுவிக்க முடிகின்றதா?

    1. குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, அது என்ன?
    2. சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு, தின்னால் தித்திப்பு. அது என்ன?
    3. குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான், எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
    4. ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
    5. வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
    6. மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
    7. காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா மயங்கிக் கிடக்கு அது என்ன?
    8. உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
    9. அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?
    10. நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
    11. பச்சைக் கதவு. வெள்ளை யன்னல் திறந்தால் கறுப்பு ராஜா அது யார்?
    12. சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம் கசப்பு அவன் யார்?
    விடைகள் சொல்லிவிட்டீர்களா?

    விடைகளைச் சரிபார்க்க  கீழே வாருங்கள்.


     .................................
     ..................................................................
    ...................................................................................................
    ..................................................................
     .................................
     .................................
     ..................................................................
    ...................................................................................................
    ..................................................................
     .................................
     .................................
     ..................................................................
    ...................................................................................................
    ..................................................................
     .................................
     .................................
     ..................................................................
    ...................................................................................................
    ..................................................................
     .................................
     
     .................................
     ..................................................................
    ...................................................................................................
    ..................................................................
     .................................
     .................................
     ..................................................................
    ...................................................................................................
    ..................................................................
     .................................
     


    உங்களுக்கு எத்தனை விடைகள் சரி்யாக வந்தன?


    3மார்க்குக்கு கீழே விடை தெரிந்தவர்களுக்கு ஹோம்வேக் நிறையவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சமையலும் தமிழும் கற்றுக் கொண்டு அடுத்த பரீட்சைக்கு வாங்க.

    6விடுகதைகளுக்கு மேலே கண்டு பிடித்தவர்களுக்கு பாஸ் சேர்டிபிக்கற் கிடைக்கிறது.

    எல்லா விடைகளையும் சரியாகச் சொன்னவர்களுக்கு  ஒரு பரிசு தரலாமா.....

    12விடுகதைகளுக்கும் சரியான விடைகளை கண்டு பிடித்தவர்களுக்கு சின்னுரேஸ்டி விடுகதை  வெற்றிக் கேடயம் வழங்கப்படுகிறது. எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டில் சேமியுங்கள்.



    10எடுத்தவர்களின் அழும் ஓசை காதில் விழுகிறது சரி நீங்களும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கோ....

    பிறக்கும் 2012 அனைவருக்கும்  சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

    - மாதேவி -

    புதுவருட கரட், வெங்காய பிரியாணி

    $
    0
    0
    ஆங்கிலப் புத்தாண்டும் தமிழ்ப் புத்தாண்டு போன்றே பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காலையில் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். சிலர் புத்தாடைகளும் அணிவார்கள்.

    வருடம் பிறந்ததும் முதலில் இனிப்பான உணவை உண்பார்கள். வருடம் முழுவதும் அதிர்ஸ்டத்துடன் இனித்திடும் என்ற நம்பிக்கைதான்.

    அன்று பெரும் பாலும் இந்துக்களின் வீடுகளில் சைவஉணவுகள்தான் சமைப்பார்கள். காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு எல்லாம் தடபுடலாக நடக்கும்.


    அதற்கு நாங்களும் விதிவிலக்கு அல்ல. புதுவருட பிரியாணி செய்துவிட்டோம்.

    என்ன ஸ்பெசல் என்கிறீர்களா?
    • புது வருட பிரியாணி என்பதால்தான் ஸ்பெசல். 
    • அத்துடன் கடையில் வாங்கும் பிரியாணி மசாலாக்கள் ஒன்றும் சேர்க்கப்படவில்லை. 
    • எல்லாமே எங்கள் வீட்டுத் தயாரிப்பு. கலப்படம் அற்றது என்பதால் சிறந்ததுதானே!

    பிரியாணி சாப்பிடும்போது வீட்டில் கேட்டார்கள் ......

    "முதல் நாளே பிரியாணி என்றால் ஒவ்வொரு நாளும் பிரியாணிதானே?"

    நாள்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும்? என்று கேட்டு அவர்கள் வாயை மூடவைத்தேன்.... ஆகா தப்பித்தேன்.

    சங்க காலத்திலும் பிரியாணி  

    பிரியாணி பற்றிச் சற்றுப் பார்ப்போம். சங்க காலத்தில் பிரியாணி சோற்றின் ஆரம்பம் தொடங்கப்பட்டுவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தில்'ஊன் சோறு' பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 'ஊன்றுவையடிசில்' என்கிறார்கள்.


    படைவீரரும் அரிசியுடன் மாமிசத்தைக் கலந்து சமைத்து உண்டிருக்கிறார்கள்.

    பெரும்தேவனார் பாடலில் 'மைஊன் புழுங்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன்' என தலைவி கூகையோடு பேசுவதாக நற்றிணை 83ல் வருகிறது.

    அகநானூற்றில் இறைச்சியோடு சேர்ந்த நெய்ச் சோறு ஆக்கிப் படைத்தலும் மணவிழா நாளில் நிகழ்ந்திருக்கின்றன.

    Briyaniஎன்பது Persian மொழிவழிச் சொல்லாகும்.Persiaஎன்பது இன்றைய ஈரான் ஆகும். சமைக்கு முன் அரிசி, மரக்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி வாசனைகள் சேர்த்து சமைப்பதாகும்.

    இம் தயாரிக்கும் சமையல் முறை பல்வேறு நாடுகளிலும் அவர்களது பாரம்பரிய சமையல் முறைகளில் இருந்திருக்கின்றன.

    பிரியாணி பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.  'தம்' வைத்து சமைக்கும் பிரியாணிகள் சுவையில் கூடியவை.
    • ஒவ்வொரு ஊர்களின் பெயரைக் கொண்டும் வெவ்வேறு வகைப் பிரியாணிகள் இருக்கின்றன. 
    • இந்தியன் பிரியாணி, சிறிலங்கள் இடியப்பப் பிரியாணி, ஈரானியன், இந்தோனீசியன், மலேசியன், காஸ்மீர், ஹைதரபாத், தாய், பிலிப்பினொ என அடுக்கிக் கொண்டே போகலாம்.
    • இந்தியாவில் மட்டும் 26 வகைகளுக்கு மேற்பட்ட பிரியாணிகள் தயாரிக்கிறார்களாம்.

    பிரியாணி பிரியர்களே ஓடத் தயாராகுங்கள் ஹோட்டல்களை நோக்கி......

    இடியப்பப் பிரியாணிபற்றிய எனது முன்னைய பதிவு 

    எந்த அரிசி

    எந்த வகையான அரிசியில் தயாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் நீண்ட ப்ரவுண் அரிசியில் தாயாரித்தார்கள். அதன் பின்னர் சிறிய வெள்ளை அரிசி வகைகளைப் பயன்படுத்தினார்கள். இப்பொழுது பெரும்பாலும் பசுமதி அரிசியைத்தான் பயன்படுத்துகிறோம்.

    புதுவருட கரட் வெங்காய பிரியாணி


    பசுமதி ரைஸ் - 1 கப்
    பெரிய கரட் - 2
    வெங்காயம் - 4
    பச்சை மிளகாய் - 2
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - சுவைக்கு
    நெய் - 2 ரீ ஸ்பூன்
    ஓயில் - 2 ரீ ஸ்பூன்


    வீட்டுத் தயாரிப்புத் தூள்கள்


    மிளகாய்த் தூள் - ½ ரீ ஸ்பூன்
    மல்லித் தூள் - 1 ரீ ஸ்பூன்
    சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
    சோம்புத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

    வாசனைக்கு

    பட்டை - 2
    ஏலம் - 4
    பிரிஞ்சி இலை - 1
    ரம்பை இலை - 4 துண்டு
    பூண்டு இஞ்சி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்


    தயாரிப்பு

    பசுமதி அரிசியை 15 நிமிடங்கள் தண்ணிரில் ஊற வையுங்கள்.

    கரட்டை மெல்லிய சிறிய 1 ½ அங்குல நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

    வெங்காயம் நீளப் பக்கமாக மெல்லியதாக நறுக்குங்கள்.

    மிளகாய் 4 நீள் பகுதிகளாக வெட்டி விடுங்கள்.

    ஒரு ரீ ஸ்பூன் நெய்;யை சோஸ்பானில் விட்டு மெல்லிய தீயில் வடித்து எடுத்த அரிசியை 2 நிமிடம் வறுத்து விடுங்கள்.

    இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அவித்து சாதத்தை எடுத்து ஆறவிடுங்கள்.

    ஒரு ரீ ஸ்பூன் நெய் ஒரு ரீ ஸ்பூன் ஓயில் தாச்சியில் விட்டு பட்டை, ஏலம், பிறிஞ்சி சேர்த்து பூண்டு இஞ்சி பேஸ்ட் கலந்து வதக்குங்கள்.

    பச்சை மிளகாயைப் போட்டு பொரிய விடுங்கள்.

    வெங்காயம் கலந்து உப்புப் போட்டு கிளறி, சற்று வதக்குங்கள் கரட் துண்டுகளைச் சேருங்கள்.

    வதங்கிய பின் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து கிளறுங்கள். பின் ஆறிய சாதத்தைக் கலந்து நன்கு சேருங்கள்.

    பரிமாறும் பாத்திரத்தில் போட்டு வறுத்த கஜீவைத் தூவி விடுங்கள்.
    புதுவருடப் பிரியாணி மூக்கைத்துளைத்திடும் உண்பதற்கு தயாராக.


    ஏற்கனவே சமைத்து வைத்த பருப்பு, பிரட்டல் கறிகள், சிப்ஸ், சலட், துணையிருக்க சுவைத்திடுங்கள்.

    இனிய வருடத்தின் ஆரம்பமாக!!!

    பிரைட் ரைஸ்   இதுவும் ஒரு வகை பிரியாணிதான்.

    :- மாதேவி -:

    0.0.0.0


    நல்ல உணவும் குப்பை உணவும்

    $
    0
    0

    உயிரினம்  வாழ்வதற்கு உணவும் நீரும் அத்தியாவசியமானவை. காற்றைப் பற்றிச் சொல்லவில்லை என நிகைக்காதீர்கள். அதையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது சமையலில் சேராதே!

    இவை யாவும் அவசியமாக இருந்தபோதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுகின்றது.

    நாவுக்கு சுவை தரக் கூடிய உணவுகளையே மனம் நாடி நிற்கும். இனிப்பு,காரம் உப்புக் கலந்த,  எண்ணெயில் பொரித்த சுவையான உணவுவகைகளை விரும்பி உள்ளே தள்ளிக் கொண்டிருக்க யாருக்குத்தான் ஆசையில்லை.

    கொழுப்பு நிறைந்த பிட்ஷா, பர்ஹர், சிப்ஸ், பேஸ்டி, கேக், டோனட் உணவுக் கூடங்களை மக்கள் அலையாக மோதுவதைக் காண்கின்றோம்.

    குப்பை உணவு junk foodஎன்ற சொல்லை இப்பொழுது ஆங்கிலத்தில் உபயோகிக்கிறார்கள். ஆனால் குப்பையை அள்ளி வாயில் போடுவதில்தான் பலருக்கு நாட்டம்.

    குப்பை உணவு

    குப்பை உணவு என்றால் என்ன?

    போஷாக்கு மிகவும் குறைவான உணவுகள் அவை.
    • அதே நேரம் அவற்றில் மிக அதிகமாக எண்ணெய், கொழுப்பு, இனிப்பு கலந்திருக்கும் 
    • அவற்றின் கலோரிப் பெறுமானம் மிக அதிகமாக இருக்கும். 
    • உப்பும் பொதுவாக அவற்றில் மிக அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். 
    • ஆனால் போஷாக்குக் கூறுகளான புரதம், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.

    இவ்வகையான கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்துதான் இருக்கின்றோம்.

    இருந்தும் இந்த நாக்கு எம்மை விட்டபாடில்லை. கணக்கு வழக்கின்றி இவற்றை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

    ஏன் எமது நாக்குகள் இவற்றை விட்டுவிடாது துரத்திப் பிடிக்கின்றன என்பதை பின்னர் பார்ப்போம்.


    நாம் தினசரி உணவுகளை எந்த விகிதத்தில் உண்ண வேண்டும் என்பதை உணவு பிரமிட் சுட்டிக் காட்டுகிறது.

    தானியங்களினால் உணவு அதுவும் முக்கியமாக தீட்டி தவிடு நீக்கப்படாத தானியங்களினாலான உணவு அதிகம் சாப்பிட வேண்டியதாகிறது. தினசரி 6 சேர்விங் என்கிறார்கள். இவை முக்கியமாக மாச்சத்தைத் தருகின்றன.

    அடுத்து காய்கறிகளும் பழங்களும் கிட்டத்தற்ற அதற்கு இணையாண அளவு உட்கொள்ளப்பட வேண்டியவையாகும். அதாவது காய்கறிகள் 3 சேர்விங் மற்றும் பழ வகைகள் 2 சேர்விங் என மொத்தம் 5 ஆகிறது. இவற்றில் இருந்து பெருமளவு நார்ப்பொருளும், விற்றமின் கனியங்கள் கிடைக்கின்றன.

    புரதங்களைப் பொறுத்த வரையில் பால், தயிர், யோர்கட். சீஸ் போன்றவை 3 சேர்விங், மீன், இறைச்சி, கோழியிறைச்சி, பருப்பு பயறு கடலை போன்றவையும், விதைகளுமாக 2 சேர்விங்  உட்கொள்ள வேண்டும்.



    ஆனால் மிகக் குறைந்த அளவு எடுக்க வேண்டியவை கொழுப்பு, எண்ணெய், இனிப்புகளாகும். இந்த குறைந்தளவு எடுக்க வேண்டிய உணவின் கூறுகளே குப்பை உணவுகளில் அதிகம் கலந்துள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும்.

    எல்லாவற்றிலும் அதிகமாக எடுக்க வேண்டியது நீர். அதாவது சாதாரண நீர் மட்டுமே.

    மென்பானம், குளிர்பானம், மதுபானங்கள் போன்றவை இதில் அடங்கவில்லை என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.

    அடிமையாகும் நாக்கு

    ஏன் எமது மனமும் நாக்கும் வேண்டாத உணவு வகைகளுக்கு அடிமையாகின்றன?

    இது பற்றி 2008 ல்  Paul Johnson and Paul Kennyஆகியோர் ஒரு ஆய்வு செய்தார்கள். அதன்படி குப்பை உணவுகள் எனப்படுபவை எமது மூளையின் கலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அதை நாடச் செய்கிறது என்கிறார்கள். இது கொகேயின், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் தமக்கு எம்மை அடிமையாக்குவதற்கு ஒத்ததாகும்.

    பல வாரங்களுக்கு அத்தகைய குப்பை உணவுகளை அளவுகணக்கின்றி உண்பதால் மூளையில் உள்ள இன்ப மையங்கள் (pleasure centers) அவற்றிற்கு இசைவாகி மேலும்மேலும் மகிழ்ச்சிக்கான உணவையே நாடும்.

    கருவிலும் பாதிக்க ஆரம்பிக்கிறது

    இத்தகைய குணமானது வளர்ந்த மனிதர்களை மாத்திரம் பாதிக்கிறது என எண்ணிவிடாதீர்கள். கர்ப்பமாயிருக்கும் தாய் இவ்வாறான தவறான உணவுப் பழக்கத்தில் மூழ்கி இருந்தால் கருவில் வளரும் குழந்தைகள் பிறந்த பின்னர் இத்தகைய தவறான உணவுப் பழக்கத்தையே நாடும் என 2007ல் British Journal of Nutritionசெய்த ஆய்வு கூறுகிறது.

    அவசரத் தீனிகள்

    இத்தகைய குப்பை உணவுகளின் தாயகம் கடை உணவுகள்தான். பெரும்பாலான உடனடியாக உண்ணும்படி வாங்கும் உணவுகள் இத்தகையவை. அவசர உணவுகள்,  திடீர் உணவுகள் (Fast foods) என்றெல்லாம் அழைக்கிறார்கள். வசதியான உணவுகள் convenience foods என்ற மற்றொரு பதமும் உண்டு.

    அவசரத் தீனிகள் ஏன்? 


     இதற்குக் காரணம் இன்றைய வாழ்வானது அவசரமும் இயந்திர மயமும் ஆகிவிட்டது.

    இத்தகைய உணவுகள்
    • உடனடியாகக் கிடைப்பது மாத்திரமின்றி, 
    • அதிக விலையுமற்றவை. 
    • இதனால் அனைத்துத் தரத்தினரையும் ஒருங்கு சேர அழைக்கிறது. 
    • இவற்றில் விலை குறைந்த கொழுப்பு இனிப்பு, உப்பு, தவிடு நீக்கபட்ட தானியங்கள் அல்லது அவற்றின் மா ஆகியவையே அடங்கும். 
    • ஆனால் சற்று விலை அதிகமான பொருட்களான போஷனைப் பொருட்களான பழ வகைகள், காய்கறிவகைகள், கொழுப்பற்ற இறைச்சி வகைகள் இருப்பது குறைவு.
    இவற்றைத் தடுக்க இந்த நவீன உணவுப் பிரமிட் என்ன சொல்கிறது என்பதையும் பாருங்களேன். தெளிவாப் படிக்க மேலே கிளிக் பண்ணுங்கள்.


    புதிய உணவுப் பிரமிட்டானது உணவு வகைகளைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் நின்று விடாது தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்பு வேண்டும் என்கிறது.

    வளர்ந்தவர்களுக்கு தினசரி 30 நிமிடங்களும், வளரும் குழந்தைகளுக்கு 60 நிமிடங்களும் என்பதை வலியுறுத்துகிறது.

    எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கும் குறைந்த எடை மீண்டும் ஏறக் கூடாது எனத் தடுப்பதற்கும் இது 90 நிமிடங்களாகும்.

    நோய்களை விதைக்கிறது

    இத்தகைய உணவு முறைகளால் இன்று பலரும் அதீத எடை கொண்ட குண்டு மனிதர்களாக மாறி வருகின்றனர்.

    ஒருவரது எடை எவ்வளவாக இருக்க வேண்டும். அவரது உயரத்திற்கு ஏற்பவே எடை இருக்க வேண்டும். இது ஆங்கிலத்தில் Body mass index எனப்படுகிறது. சுருக்கமாக BMI என்பார்கள் அதையே தமிழில் இப்பொழுது உடல் நிறை குறியீட்டெண் என அழைக்கிறார்கள். ஒருவருடைய உயரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல் எடையை மதிப்பிடுவதற்கு இக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

    உங்களது  BMI எவ்வளவு?

    உங்களது  BMI யை அறிவது எப்படி? உங்களது எடையை கிலோகிறாமில் அளந்து அதை மீற்றரிலான உங்கள் உயரத்தின் வர்க்கத்தால் பிரிப்பதாகும். இந்த இடியப்பச் சிக்கல் எனக்குப் புரியவில்லை என்பவர்களுக்கு வழி சொல்கிறேன்.

    இந்த இணைப்பிற்குச் சென்று நீங்களே சுலபமாக அறிந்து கொள்ளலாம்


    இது இலங்கை இந்தியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கானது. இலங்கை அரசின் சுகாதரத்துறை அமைச்சினால் வெளியிட்ப்பட்டுள்ளது.
    உங்களது உயரத்திற்கு ஏற்றதா? அதிகமா? குறைவா என்பதைத் தருவதுடன் உங்களது உயரத்திற்கு எந்தளவு எடை இருப்பது நல்லது என்பதையும் அறிவுறுத்துகிறது.


    நவீன உலகின் உயிர்கொல்லி நோய்களாக
    • நீரிழிவு, 
    • இருதய நோய்கள், 
    • உயர் இரத்த அழுத்தம், 
    • புற்று நோய்கள் 
    ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.

    இவை தொற்று நோய்களை விட வேகமாகப் பரவி கணக்கிலடங்காத உயிர்களைக் காவு கொள்வதற்கு முக்கிய காரணம் இத்தகைய போஷாக்கற்ற உணவு முறைகளே. அவற்றுடன் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும், மாசடைந்த சூழலும் காரணங்களாகின்றன என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

    உடல் ஆரோக்கியமாக எவ்வளவு உண்ண வேண்டும்.


    அதற்கு எவ்வளவு உண்ண வேண்டும்?


    அதாவது எமது தினசரி கலோரித் தேவை எவ்வளவு என்பதைக் கண்டறிய இந்த இணைப்பைக் கிளிக் பண்ணுங்கள்

    உங்கள் தினசரி கலோரித் தேவை எவ்வளவு

    அதெல்லாம் சரி! ஆரோக்கியமான உணவுகள் எவை என்று சொல்லவில்லையே எனக் கேட்கிறீர்களா? whfoods.com இவற்றைப் பட்டியலிடுகிறது.



    என்ன இவற்றில் சில எங்கள் நாட்டிற்குக் கிடைக்காதா என்கிறீர்களா? உண்மைதான். இருந்தாலும் இங்கு கிடைக்கும் பல வகை உணவுகளையும் சொல்கிறதே. அவற்றைப் பயன்படுத்திப் பலன் பெறலாமே.

    மாதேவி

    0.0.0.0.0.0

    இஸ்சோ வடே.... இறால் காரக் குழம்பு

    $
    0
    0

    "வடே வடே வடேய் இஸ்சோ வடே.."

    இந்தக் கூவலைக் கேட்காமல் நீங்கள் இலங்கைப் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரயாணம் பண்ணியிருக்க முடியாது.

    அவ்வளவு பிரசித்தம், பெரு விருப்பு இந்த இஸ்சோ மீது.


    இஸ்சோ என்றால் வேறொன்னும் இல்லை! நம்ம இறால்தான்

    இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு.  இங்கு மீன் உற்பத்தி பலகாலம் தொட்டு நடைபெற்று வருகிறது. இத்தொழில் கைத் தொழிலாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

    முதலில் புத்தளம் மாவட்டத்தில் இறால் மீன் பிடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    வருடம் ஒன்றிற்கு 4360 மெட்ரிக் தொன் இறால்கள் இங்கு கிடைத்தன. பின்னர் வெள்ளைப் புள்ளி நோயினால் வீழ்ச்சி ஏற்பட்டது. 1570 மெட்றிக் தொன் ஆகக் குறைந்தது. இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் சுமார் 2900 ஹெக்டரில் இறால் பண்ணைகள் அமைக்க கடற்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இறால் பண்ணைகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளையும் வழங்க தீர்மானித்துள்ளார்கள்.

    இறால் பிரியர்களுக்கு ஒரு அமோக செய்தி. இத் திட்டத்தின் படி வடக்கிலும்

    கிழக்கிலுமாக 4000 ஹெக்டரில் இறால் வளரப்புப் பண்ணைகளை முன்னெடுக்க முடியும் என்கிறார்கள். இனி என்ன? இறால் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.


    அலர்ஜி உள்ளவர்களுக்கு திண்டாட்டம் கூடி வரும் எனச் சொல்லத்தேவையில்லை.

    இறால் மிகவும் சுவையான உணவாக இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகம். அதியுயர் பெறுமதி மிக்க உணவாக இருக்கின்றது. 500 கிறாம் 450 ரூபாவிற்கு மேல் விற்பனையாகிறது.

    இலங்கையில் கரையோரப் பகுதிகளில் இறால் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இத்துடன் கடல் நீர் ஏரிகளிலும் இறால் மீன்பிடிப்பதைக் காணலாம்.



    தொண்டைமனாற்றுக் கடல் வல்லைவெளி, காரைநகர், மழைநீர்த் தேக்கங்களில் கூடுகட்டி வலை வீசி இறால் மீன் பிடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

    இறால் நன்நீரிலும் உவர் நீரிலும் வாழும். பின்புறமாகவும் நீந்தும். கழிவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன.

    மட்டக்களப்பு சிங்கை இறால் மிகவும் பிரசித்தமானது. ஆசிய நாடுகள் இறால் உற்பத்தியி;ல் முன்னணியில் நிற்கின்றன. சீனா, தாய்லாந்து இந்தியாவின் ஆந்திரா இறால் உற்பத்தி அதிகம். உலகில் தாய்லாந்து இறால் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கின்றது.



    இறாலில் உள்ள போசனைப் பொருட்கள் எவை?


    ஒரு சேர்விங் 3 அவுன்ஸ் என எடுத்துக் கொண்டால் அதில்
    • புரதம் 18 கிறாம் உள்ளது. 
    • கலோரி அளவு 92 மட்டுமே. 
    • நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே உண்டு. 
    • கொலஸ்டரோல் அளவு மிக அதிகம் 199 மி.கிராம் உள்ளது.
    • இரும்புச் சத்து 15 சதவிகிதம்
    • விற்றமின் சீ  3 சதவிகிதம்
    • விற்றமின் ஏ  4 சதவிகிதம்
    • கல்சியம்  3 சதவிகிதம்
    குருதிக் கொலஸ்டரோலும் உணவுக் கொலஸ்டரோலும்

     எமது குருதிக் கொலஜ்டரோலைப் பொறுத்தவரையில் உணவிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் கொலஸ்டரோலை விட நிரம்பிய கொழுப்புகளால் எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோலே அதிக பாதகம் கொண்டது.
    • இறாலில் நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பாதிப்பு அதிகம் இல்லை. 
    • ஆனால் அதிகளவு கொலஸ்டரோல் இருக்கிறது. 
    • மனிதர்களது உணவில் உண்ணப்படும் நேரடிக் கொலஸ்டரோல் 300 மி.கி தாண்டக் கூடாது என்கிறார்கள். முட்டையில் 250 மிகி இருப்பதால் அளவோடு சாப்பிட வேண்டும் என்கிறார்கள். இறாலில் 199 இருப்பதால் அதையும் ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.
    • ஆனால் இறால் முட்டை, இறைச்சி எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    இலங்கையில் இஸ்சோ வடை Isso Vadeமிகவும் பிரபலம். 



    கூனி இறால் என அழைக்கப்படும் சிறு இறால் போட்டு புட்டு அவித்து உண்பார்கள். சிறிய இறால் கருவாடும் பிரபலம். பருப்பு, பலாக்காய் கறிகளில் கலந்து கொள்வார்கள். இறால் பிரியாணி, ப்ரைட் ரைஸ், புட்டு, இடியாப்ப பிரியாணி, நூடில்ஸ் என மக்கள் வெளுத்துக் கட்டுவார்கள்.

    சைனீஸ்தாய் குக்கிங் இல் புரொன் டிஸ்சஸ் முக்கியத்துவம் வகிக்கின்றன. ஹார்லிக் புரொன் பெப்பர் புரொன், ஸ்வீற் அன்ட் சவர் புரொன், புரொன் சூப், கிறில்ட் புரொன், பட்டர் புரொன், புரொன் பாஸ்ரா, ஹாட் சில்லி புரொன், ஸ்பைசி ரொமாட்டோ புரொன், என இன்னும் பல விதங்களாக உணவுகள் தயாரிக்கலாம்.

    சிப்ஸ் பிரியர்களுக்காக இறால் ப்ளேவட் சிப்ஸ்சும், பைக்கற்களில் விற்பனை ஆகின்றன.

    இலங்கை இந்தியச் சமையல்களில் இறால் முருங்கைக் காய், கத்தரிக்காய் குழம்பு, பலராலும் விரும்பப்படும் உணவாகும்.

    இறால் வறை, சலட், பொரியல், தேங்காய்ப்பால் கறி, சொதி, தொக்கு, கூழ், சம்பல், பஹோடா, எனப் பலவாறு உண்ணப்படுகிறது.

    இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு

    சேகரிக்க வேண்டியவை

    இறால் -  20
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    பெரும்சீரகம் - ¼ தேக்கரண்டி
    வெந்தயம்  - ¼ தேக்கரண்டி
    தட்டிய பூண்டு - 4
    மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
    மல்லித் தூள் - ½ ரிஸ்பூன்
    மஞ்சள் - ¼ ரிஸ்பூன்
    தேங்காய்ப்பால் - ¼ கப்
    உப்பு - தேவைக்கு
    புளிக்கரைசல் - தேவைக்கு
    ரம்பை - 4 துண்டு
    கறிவேற்பிலை - சிறிதளவு.
    ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

    தயாரிப்பு

    இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள்.

    உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.

    ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.

    ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள்

    இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.

    மணம்; ஊரையெல்லாம் கூட்டி வயிற்றைக் கிளறும்.

    சாப்பிடாதவர்களுக்கு வயிற்றைக் குமட்டும். மூக்கைப் பொத்தி வீட்டைவிட்டே ஓட வைக்கும்.

    புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் போலில் மாற்றி விடுங்கள். நாலுகால் பூனைகளுடன் இரண்டுகால்
    பூனைகளும் களவு எடுக்க வரும்.

    (  குறிப்பு - மகளுக்காக சமைத்தது  )

    மாதேவி

    0.0.0.0.0.0.0.0

    சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

    $
    0
    0
    குளர்மையுடையது எனப் போற்றப்படும் இது இடைவெப்ப வலயத்திற்குரிய மரம். Lythraceae குடும்பத்தைச் சார்ந்தது.
    • ஈரான் ஆப்கனிஸ்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. 
    • எகிப்து இஸ்ரேலில் காட்டுச் செடியாக வளர்ந்தது. 
    • பின் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு பரவியது என்கிறார்கள். 
    • இமாலயா பகுதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

    எங்கள் தோட்டத்தில் பூவாக காயாக பழமுமாக
    மாதுளை, மாதுளங்கம், என்ற பெயர்களில் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Punica Granatum. இதில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என மூன்று வகைகள் உள்ளன. இதை "சூப்பர் புருட் " (Super fruit ) என்றும் அழைக்கின்றார்கள்.

    வீட்டுத் தோட்டங்களிலும் சிறிய இனங்களை பெரிய சாடிகளிலும் பயிரிட்டுக்கொள்ளலாம். இம் மரத்தின் பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணமுடையது என்கிறார்கள்.

    சிறிய மரம் 8 மீற்றர் உயரம் வரை வளரும். 100- 150 பழங்கள் வரை கொடுக்கும். நல்ல வடிகால் கொண்ட வண்டல் மண் மாதுளம் செடி வளர்வதற்கு ஏற்றது.

    பொதுவாக மழைக்கால டிசம்பரில் வெட்டிவிட்டால் பெப்ரவரி மார்ச்சில் பூத்து யூன் ஆகஸ்டில் பழம் கிடைக்கும் என்கிறார்கள்.

    வரிசைக்கு வரிசை நாலு மீற்றரும் செடிக்கு செடி 2 மீற்றரும் இருக்குமாறு மாதுளை நடவு செய்வது சிறந்தது என்கிறார்கள்.


    மாதுளம் பயிர்ச் செய்கை
    கறுத்தத் தோலுடைய மாதுளம் பழம் பார்த்திருக்கிறீர்களா, Saveth இனம். கறுத்த இனத்திற்குள் இருப்பதும் சிவத்த முத்துக்கள்தான்.




    சித்த ஆயுள்வேத மருத்துவங்களில்

    சித்த ஆயுள் வேத மருத்துவ முறைகளில் இதற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    • இரத்த விருத்திக்கு நல்லது 
    • இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைத் தரவல்லது. 
    • குடற்புண்களைக் குணப்படுத்துகிறது. 
    • நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் தேறவும் பலம் பெறவும் இப்பழம் பெரிதும் உதவும்.
    மேலும்.....
    • பித்தத்தைத் தவிர்க்கும். 
    • மலட்டுத்தன்மையை நீக்கும். 
    • உடற்சூட்டைத் தணிக்கும். 
    • மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து பருக வாந்தி நிற்கும் 
    • மாதுளம் பழம் விதையுடன் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். 
    என ஆயுள்வேத சித்த வைத்தியங்களில் சொல்லப்படுகிறது.
    முத்தனைய மாதுள முத்துக்கள்
    உணவுவகைகள்

    தாகத்தைத் தணிக்கும். என்பதால் கோடையில் சாப்பிடச் சிறந்தது. ஜீசாகவும் மில்க் ஜேக், சர்பத், மாதுளை லசி, மாதுளம் சாதம், மாதுளம் சலட், புருட் சலட், பஞ்சாமிர்தம், எனத் தயாரித்து உட்கொள்ளலாம்.

    புடிங் வகைகளில் கலக்கலாம்.

    வாட்டிய இறைச்சி வகைகளிலும் சலட்இலைகளுடன் கலக்கின்றார்கள்.

    பேசியன் சூப்பில் போடுகின்றார்கள்.

    மாதுளம் பானமாகவும் விற்கப்படுகிறது.

    ஆர்மேனியாவில் வைன் தயாரிக்கிறார்கள்.

    கலிபோர்ணியா, அரிசோனாவிலும்  ஜீஸ் தயாரிக்கப் பயிரிடுகின்றார்கள்.

    இந்தியாவில் மஹாராஸ்ரா குஷராத் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது.

    விஞ்ஞான ஆய்வுகளில்

    மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை இப் பழத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். இப்பழத்தில் Phytochemicalஉள்ளது. எலஜிக் அமிலம் என அழைக்கபடும் இது புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள். இது ஆய்வக முடிவுதான். இன்னமும் மனிதர்களில் பரீட்சித்துப் பாரக்கவில்லை.

    மாதுளம் பிஞ்சு என் அக்கா கையில்

    மேலும் சுவாசப்பை புற்று நோய், புரஸ்ரேட் புற்று நோய், ஆகியவை தோன்றுவதற்கான சாத்தித்தைக் குறைக்கும் என எலிகளில் செய்யபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    Pomegranate Health Benefits வீடியோவில் பார்க்க

    அல்சிமர் நோய் தீவிரமடைவதைத் தாமதமாக்கும் என எலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவித்தது.


     எலும்புத் தேய்வு நோயான ஒஸ்டியோ ஆரத்திரைடிஸ் நோயில் குருத்தெலும்பு தேய்வதைக் குறைக்கக் கூடும் என மற்றொரு ஆய்வு தெரிவித்தது.


    தினமும் 1.7 அவுன்ஸ் மாதுளம் சாறு குடித்தால் உயர் இரத்த அழுத்தமானது 5 சதவிகிதத்தால் குறையும் என ஒரு ஆய்வு கூறியது.

    அதேபோல பற்களுக்கும் முரசுகளுக்கும் இடையே காரை படிவது dental plaque குறையலாம் எனவும் வேறொரு ஆய்வு கூறியது.

    இத்தகைய ஆய்வுகளும் பெரும்பாலும் மாதுளை உற்பத்தியாளர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டதால் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இவற்றின் நன்மையை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆண்மைக் குறைப்பாடு பற்றி செய்திகளுக்கு உதவுவது பற்றி ஆதாரம் இல்லை என்கிறது.

    படிக்க  Evidence from pomegranate study not firm




     
    இதில் உள்ள போஷணைப் பொருட்கள் என்ன? எவ்வளவு இருக்கின்றன? அமெரிக்காவின் USDA தரும் தகவல்கள் கீழே உள்ளன

     
    Pomegranate, arils only
    Nutritional value per 100 g (3.5 oz)
    Energy346 kJ (83 kcal)
    Carbohydrates18.7 g
    - Sugars13.7 g
    - Dietary fiber4.0 g
    Fat1.2 g
    Protein1.7 g
    Thiamine (vit. B1)0.07 mg (6%)
    Riboflavin (vit. B2)0.05 mg (4%)
    Niacin (vit. B3)0.29 mg (2%)
    Pantothenic acid (B5)0.38 mg (8%)
    Vitamin B60.08 mg (6%)
    Folate (vit. B9)38 μg (10%)
    Vitamin C10 mg (12%)
    Calcium10 mg (1%)
    Iron0.30 mg (2%)
    Magnesium12 mg (3%)
    Phosphorus36 mg (5%)
    Potassium236 mg (5%)
    Zinc0.35 mg (4%)
    Percentages are relative to
    US recommendations for adults.
    Source: USDA Nutrient Database

    குறைந்தளவு கலோரிச் சத்தும் கொழுப்பும்  இருப்பதால் உடலுக்கு தீமையளிக்காது.  சிறிதளவாவது நன்மையளிக்கும் என நம்பலாம். அழகிய பழமாகவும் கவர்வதால் விரும்பி  உண்ணப் படுகின்றது. சுவையாகவும் இருக்கின்றதல்லவா அதனால் உண்பது நல்லதே.

    சலட் செய்ய

    தேவையானவை 

    மாதுளம் பழம் - 1
    தயிர் - 1 கப்
    கப்பல் வாழைப்பழம் -  2
    சீனி -  1 ரீ ஸ்பூன்
    உப்பு சிறிதளவு

    தயாரிக்க

    • தயிரை நன்கு அடித்து சீனி, உப்பு கலந்துவிடுங்கள். 
    • பழங்களைக் கழுவி தோல் நீ்க்கி எடுங்கள்.
    • வாழைப்பழத்தை 1/2 அங்குல வட்டமாக வெட்டி அடித்து வைத்த தயிரில் கலவுங்கள்.
    • மாதுளை முத்துக்களை உடைத்து எடுத்து கலந்துவிடுங்கள்.
    • குளிரூட்டியில் வையுங்கள்.
    • கண்ணுக்கு கலர்புல்லாக இருக்கும். நாவுக்கு குளிர்ச்சியான சலட்.
    தனியாகவும் சாப்பிடலாம்.

    சாதத்துடன் கலந்து சாப்பிட கோடை வெப்பத்திற்கு குளிர்ச்சி தரும்.

    கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சலட் பற்றிய முன்னைய பதிவுகள்

     1. ஜில்லென்று ஒரு சலட்
     2. வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்


    -: மாதேவி :-

    பாகற்காய் பலாக்கொட்டை பால்கறி

    $
    0
    0

    'பார்த்தால் பசப்புக்காரி கடித்தால் கசப்புக்காரி' அவள்தான் இவள்.

    Cucurbitaceae  குடும்பத்தைச் சார்ந்தது விஞ்ஞானப் பெயர் Momordica charantiaஎன்பதாகும். ஆசியா ஆபிரிக்கா, கரீபியன் தேசங்களில் வாழும் தாவரம். தாயகம் தெரியவில்லை என்கிறார்கள்.

    இவற்றில் பல இனங்கள் உள்ளன. வடிவங்களும் பலவாகும். அதன் கசப்புத் தன்மையும் இனத்திற்கு இனம் வேறுபடும்.


    பச்சை, வெளிர் பச்சை, முள்ளுப் பாகற்காய், கரும் பச்சை நிறத்தை உடைய குருவித்தலைப் பாகற்காய். பெரிதாக நீளமாக இருப்பது கொம்புப் பாகற்காய்.

    பச்சையாக இருக்கும் பாகற்காய் பழுக்கும்போது செந்நிறமாக மாறுகிறது. அத்துடன் கசப்பும் கூடுகின்றது.


    ஓர்க்கிட் பூவல்ல! பாகற்காய் பழமாக..

    மிகவும் சிறிய ஒருவகை மேல்புறம் தும்புகள் காணப்படும் சிங்களத்தில் 'தும்பக் கரவல' என்கிறார்கள். இது கசப்புத்தன்மை இல்லாதது.




    சீனவகை பாவற்காய் சற்று வெளிர் பச்சை நிறமுடையது. 30-40 செமி நீளமானது.  



    பாவற்காய் ஓர் கொடித் தாவரம். நிலத்திணை வகையைச் சார்ந்தது. மஞ்சள்நிறப் பூக்கள் காணப்படும். இதன் பூக்களில் ஆண் பூ, பெண் பூ என வித்தியாசம் இருக்கிறது.


     எங்கவீட்டு பூச்சாடியில் மலர்ந்த பாகல்கொடி

    பாகல்கொடி என அழைப்பார்கள். புடோல், வெள்ளரி, தர்ப்பூசணி, பூசணிக்காய் வகைகளைச் சார்ந்தது.

    ஆங்கிலத்தில் bitter melon,  bitter gourd, bitter squash,தமிழில் பாகற்காய். சிங்களத்தில் கரவல.

    100 கிராமில் காபோகைதரேற் 4.32 கிராம், சீனி 1.95 கிராம், நார்சத்து 2.0 கிராம், நீர் 93.96 கிராம், கொழுப்பு 0.18 கிராம், பொற்றாசியம் 319 மை.கி, பொஸ்பரஸ் 36 மை.கி,

    யூஸ், ரீ, தயிர் சலட், சப்ஜி ஊறுகாய், சிப்ஸ் குழம்பு, வறுவல், சூப் எனப் பலவாறு தயாராகின்றன.

    வட இந்திய சமையல்களில்

    மசாலாக்களை ஸ்ரவ் செய்து பொரித்து எடுப்பார்கள்.

    தென் இந்திய சமையல்களில்

    துவரன், தீயல், பிட்லா, பொடிமாஸ், ரசவாங்கி. புளிக் குழம்பு, வத்தல் குழம்பு என இன்னும் பலவகை.

    இலங்கைச் சமையலில்

    காரக் குழம்பு, பால்க் கறி, சிப்ஸ், சம்பல், தயிர் சலட், பொரித்த குழம்பு, புளிக் குழம்பு, வத்தல் குழம்பு, பாவற்காய் முட்டை வறை, பாவற்காய் முட்டை ஸ்ரவ், கருவாட்டுப் பாகற்காய் எனப் பலவாறு சுவைக்கும்.

    பாகிஸ்தான் சமையலில்

    காயை அவித்து எடுத்து அரைத்து அவித்த இறைச்சியை ஸ்டவ் செய்துகொள்கிறார்கள்.

    மருத்துவப் பயன்பாடு 

    ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பழைய காலம் தொட்டு மருத்துக்காகப் பயன் படுத்தி இருக்கின்றார்கள்.

    • நீரிழிவு நோயளர்களுக்கு மிகவும் உகந்தது. இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். 
    • பாவற்காய் டயபற் ரீ கிடைக்கின்றது. 
    • வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். 
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. 
    • மலச்சிக்கலைத் தீர்க்கும். 
    • பாகற்காயின் இலையும் மருத்துவப் பயன் உடையது. 
    • சாறு எடுத்து பலவித நோய்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

    அலம்பல் வேலியில்லையாம்! பல்கணி சுவரில் படர்கிறார்.

    உடல் நலத்துக்கு

    கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் பலரும் உண்ண விரும்புவதில்லை. பெயரைக்கேட்டாலே ஓட்டம் எடுப்பர்.

    உடல் நலத்திற்கு வேண்டியது என்பதால் உண்பது அவசியம்.
    தேங்காய் நீர், பலாக்கொட்டை, தக்காளிப் பழம், முட்டை, கருவாடு, சேர்த்துச் செய்தால் கசப்புத்தன்மை தெரியாமல் பலவித சமையல்கள் செய்ய முடியும்.

    பாவற்காய் பலாக்கொட்டை பால்கறி
     
    வீட்டில் காய்க்கவில்லை. சமையலுக்கு சட்டிக்குள் போக காத்திருக்கிறார்

    தேவையானவை

    பாகற்காய் - 1
    பலாக்கொட்டை – 5 - 6
    சின்ன வெங்காயம் - 10
    பச்சை மிளகாய் - 2
    கருவேற்பிலை சிறிதளவு
    தேசிப்புளி- 1 ரீ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் நீர் - ½ டம்ளர்
    தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க தேவையானவை

    சின்ன வெங்காயம் - 3
    செத்தல்மிளகாய் - 1
    கடுகு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை சிறிதளவு
    ஓயில் - 2 ரீ ஸ்பூன்



    பலாக்கொட்டை மல்லித்தழைத் தளுவலுடன் பாகற்காய் பாற்கறி.

    செய்முறை

    • பாகற்காயை  3 அங்குல நீளமாகவெட்டி, உட்பகுதியை நீக்கி கழுவி எடுக்கவும். துண்டங்களை நீள் பக்கமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
    • பலாக்கொட்டையை தோல் நீக்கி கழுவி எடுங்கள். 
    • மேல்தோலை நீக்கி விடுங்கள். 
    • சிறிய நீள் துண்டுகளாக வெட்டுங்கள். 
    • வெங்காயம் மிளகாயை நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். 
    • காய்களைப் பாத்திரத்தில் போட்டு, உப்பு, தேங்காய் நீர் விட்டு, கருவேற்பிலை சேர்த்து மூடி போட்டு, 5-7 நிமிடம் அவிய விடுங்கள். 
    • திறந்து பிரட்டிக் கொள்ளுங்கள். 
    • நீர் வற்றிய பின் தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி இறக்கி வையுங்கள்.

    ஓயிலில் தாளிதப் பொருட்களை தாளித்து சமைத்த பாகற்காயைக் கொட்டி நன்கு ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்குங்கள். தேசிப்புளி கலந்து எடுத்து வையுங்கள்.

    ' கசப்பும் இனிப்பும் சேர்ந்த பசப்புக்காரி' சாப்பிடத் தயாராகிவிடுவாள்.


    மேசையில் சாப்பிடத் தயாராக இருக்கிறது
    குறிப்பு

    தேங்காய் நீர் சேர்ப்பதால் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.
    மேலும் சிறுவர்களுக்கு நன்கு கசப்பைக் குறைக்க விரும்பினால் ½ ரீ ஸ்பூன் சீனியை இறக்கும்போது கலந்துவிடுங்கள்.
    ( வெல்லம் சேர்த்தால் கறியின் நிறம் மாறிவிடும் )

    பலாக்கொட்டை சேர்த்த மற்றொரு சமையல் பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல்

    மாதேவி

    வயல் நெல் சோறு சாப்பிட வாங்க

    $
    0
    0

    வேட்டைக் காலம் முடிய மனித நாகரீகத்தின் ஆரம்பமாக விவசாயம் செய்ய நதிக்கரை ஓரங்களில் குடியேறினர்.

    சோறும் தானியங்களும் பழைய கால பிரதான உணவாக இருந்திருக்கின்றன. தினைப்புலம் காத்த வள்ளியும் எங்கள் புராணக்கதையில் இருக்கின்றார்.


    ஆரியர்கள் தானியங்ளைப் பயிரிட்டு இருந்தார்கள் என்பதை பாரம்பரிய கதைகளிலிருந்து அறிகின்றோம். பாளி நூலில் 307 வகையான நெல்லினங்கள் காணப்படடன என்கிறார்கள்.

    நன்றி commons.wikimedia.org
    பழம் தமிழர் உணவுகள் தினைச்சோறு, சாமைச்சோறு, வரகரிசிச் சோறு,உழுத்தம் சோறு, வெண்சோறு, கம்பஞ் சோறு, மூங்கில் அரிசிச் சோறு,  நீர்ச் சோறு, குறுணி அரிசிச் சோறு, கூட்டாஞ் சோறு, என பல்சுவைப் பட்டதாக இருந்திருக்கின்றன.

    ஆசிய நாட்டவர்களின் பிரதான உணவு நெல் அரிசிச் சோறு. இலங்கையும் அரிசி உணவை உண்ணும் முதன்மை நாடாக விளங்குகிறது.

    நன்றி eelamlife.blogspot.com

    இலங்கையில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பல பாகங்களிலும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

    உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். 40க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது.

    Thanks:- perfecthealthdiet.com
    அரிசியுணவுண்ணும் நாடுகளில் (China, India, Japan, Indonesia, and southeast Asia; and in sub-Saharan Africa)உடல் அதீத பருமனடைவோர் (Obese) குறைவு என்கிறார்கள். படம் மேலே.

    உலகளாவிய ரீதியில் உணவிலிருந்து கிடைக்கும் சக்திப் பெறுமானத்தில் 20 சதவிகிதத்தை அரிசியே வழங்குகிறது. அதே வேளை கோதுமை 19 சதவிகிதத்தையும், சோளம் 5 சதவிகிதத்தையும் வழங்குகிறது.

    கலர் கலராகவும் அரிசிகள் கிடைக்கின்றன. நாம் காணும் வெள்ளை அரிசி, தவிட்டு நிற அரிசி என்பவற்றிக்கு அப்பால் சிவப்பு, கத்திரிப்பூ கலரிலும் கிடைக்கின்றன.

    கீழே Korean Purple Rice and Beans
    Thanks:-  mightysweet.com
    இலங்கையைப் பொறுத்தவரையில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. இந்தியா சீனா போன்ற வெளி நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

    மாறி வரும் கால நிலை மாற்றங்களும், நீர் பற்றாக் குறையும் மழையின்மை, வரட்சி, வரட்சிக்குப் பின்னான பெருவெள்ளப் பெருக்குகளாலும் பயிரிடுவதில் பிரச்சனைகளும் சவால்களும் எழுகின்றன. நிலத்தடி நீர் வரட்சியடையும்போது உவர்ப்புத் தன்மை உண்டாகும். கடல் நீர் உயர்வதாலும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர்உப்பு நீராக மாறுவதாலும் உணவு உற்பத்தியும் பாதிப்படைகிறது.

    சீனாவில் வரட்சியடைந்த ஒரு நீர்த் தேக்கத்தில் மிருகங்களும் மனிதர்களும்....
    உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் வியட்நாம் மக்கான் டெல்டா பகுதியில் புவி வெட்பத்தால் கடல் நீர் உட்புகுந்து நெல்வயல்கள் அழுகிப் போய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான அதீத உரவகைளின் இரசாயனப் பாவனை நிலத்தின் உற்பத்தித் தன்மையைக் குறைக்கின்றது என்கிறார்கள்.

    நெல்லைத் தாக்கும் நோயில் பக்டீரியாவின் தாக்கமே அதிக பாதிப்பைத் தருகின்றது. இதைத் தடுக்க இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில்; புதியரக நெல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'சம்பா மசூ10ரி' என்ற பெயரிடப்பட்டுள்ள இவ்வினம் பக்றீரியா நோயினால் ஏற்படும் தாக்கத்தை தாங்கக் கூடிய இனம் என்கிறார்கள். இவ்வினத்தை நெல் ஆராச்சி நிலையமும் உயிரியல் மையமும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பம்சமாகும். உயரி தொழில் நுட்ப கருவி ஒன்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட சோதனைகள் மேற்கொள்ளபட்டு இதன் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

    நன்றி:- sreechandrab.sulekha.com பாரம்பரிய முறையில் அறுவடை
    ஆரம்பத்தில் தனிமனித உழைப்பால் உருவாக்கபட்ட நெல் விளைச்சல் நாளடைவில் யந்திரங்களின் உதவியுடன் நெல் வெட்டுதல் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இயந்திரங்களின் உதவியால் நெல் அறுவடை

    நெல் புல் வகையைச் சேர்ந்த தாவரம். தென்கிழக்காசியாவில் தோன்றியது என்கிறார்கள். நாற்று நடுவதற்கு நாற்றுக்கள் முப்பது நாள் பயிராக இருக்க வேண்டும்.

    நன்றி blog.balabharathi.net
    நெல் 5 மாதங்கள் வரை வளரக் கூடிய ஒருவருடத் தாவரமாகும். உலகில் முதல் முதலாக ஆசிய நெல் ஆபிரிக்க நெல் என இரு இன நெற் பயிர்கள் பயிரடப்பட்டன என்கிறார்கள். ஆசியாவில் நெற் சாகுபடி கி.மு 4500 முன்பாகவே பல நாடுகளில் ஒரே நேரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது.

    உலகில் சோளத்திற்கும் கோதுமைக்கும் அடுத்ததாகப் பயிரப்படுவது நெல்தான்.

    நாட்டரிசி, மொட்டைக கறுப்பன் அரிசி, வவுனியா அரிசி, வரணி அரிசி, தம்பலகாமம் வயல் நெல் அரிசி, இறத்தோட்டை வயல் நெல், என்றெல்லாம் வண்டில், லொறிகளில் மூட்டை மூட்டையாக பயணித்து வந்தன. பத்தாயங்களில் சேகரித்து வைக்கப்பட்டு கொத்துக்களால் அழந்து எடுக்கப்பட்ட காலங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. நெல் அவித்து நிழலில் உலர்திக் காயவைத்து உரலில் இட்டு உமி தீட்டி புடைத்து மண்பானையில் இட்டு சோறு ஆக்குவது பாட்டிகாலம் அதன் சுவை இப்போது உண்ணக் கிடைப்பதில்லை.

    முற்றத்தில் உலர்திய நெல்லை அணில், குருவிகள், காகம், கோழி கூட்டாக உணவு உண்ணும். உமிக்குருவிஎன்றே ஒரு குருவியினம் இருக்கின்றது. இரவில் எலிகளும் வெட்டிக் கொள்ளும். எறும்பும், அந்துப் பூச்சிகளும் உணவாக்கிக் கொள்ளும்.

    போஷாக்கைப் பொறுத்த வரையில் அரிசியில் அதிகமிருப்பது மாப்பொருள்தான். ஆயினும் ஓரளவு புரதமும் இருக்கிறது . இவற்றைத் தவிர நார்ப்பொருளும் அதிகம் உண்டு. தயமின், நியாசின், ரைபோபிளேவின் போன்ற விற்றமின்களும் அதிகமுண்டு. ஆயினும் தீட்டாத அரிசியிலே இவற்றின் செறிவு அதிகமாக இருக்கும். நன்கு தீட்டும்போது தவிட்டுடன் இவை நீங்கிவிடுகின்றன. தவிடு உண்ணும் மாடுகளுக்கு நல்ல போஷாக்குக் கிடைக்க சக்கையை நாம் உண்கின்றோம்.


    Rice Nutrition Chart

    Rice Type   
    Protein (g/100g)   
    Iron (mg/100g)   
    Zinc (mg/100g)   
    Fiber (g/100g)
    White Rice (polished)   
    6.8   
    1.2   
    0.5   
    0.6
    Brown Rice   
    7.9   
    2.2  
    0.5   
    2.8
    Red Rice   
    7.0   
    5.5   
    3.3   
    2.0
    Purple Rice   
    8.3   
    3.9   
    2.2   
    1.4
    Black Rice   
    8.5   
    3.5   
    -   
    4.9


    கால மாற்றத்தில் வெள்ளை அரிசிகள் முதலிடம் வகிக்கின்றன. சம்பா, பொன்னி, பாஸ்மதி, பாட்னா, சூரியச்சம்பா, எனப் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. மக்களும் சுவை அதிகம். சமைக்கும் நேரம் குறைவு எனக் காரணம் கூறி இவற்றையே நாடுகிறார்கள்.

    தற்கால உணவுப் பழக்கங்களில் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து நாவின் சுவை குறித்த பார்வையே மேலோங்கி நிற்கிறது. இதனால் நாட்டரிசிச் சோற்றை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. மெதுவான வெள்ளை அரிசிச் சோற்றையே விரும்புகிறார்கள். அதனால் உண்ணும் அளவும் அதிகரிக்கிறது. எடுக்கும் அளவு கூடுவதால் நீரிழிவு,கொலஸ்டரோல் வருவதற்கு ஏதுவாகின்றன.

    அரிசியை வடித்து கஞ்சியைக் கொட்டி சத்துக்களை வீணாக்காமல் சமையுங்கள். கஞ்சியை வடித்தால் வீட்டில் உள்ளோர் பகிர்ந்து குடித்துவிடுங்கள்.


    நாட்டரிசிச் சோறு

    தேவையானவை
    நாட்டரிசி - 1 கப்
    தண்ணீர்  - 2 1/4 -  2 1/2 கப் 

    செய்முறை

    அரிசியைக் கழுவி, கல்லிருந்தால் அரித்து விடுங்கள்.
    பிரஷர் குக்கரில் இட்டு தண்ணீரை விட்டு 5 விசில் வைத்து எடுங்கள்.
    ரைஸ் குக்கரில் சமைத்தும் எடுக்கலாம்.

    -: மாதேவி :-

    0.0.0.0.0.0.0
    Viewing all 51 articles
    Browse latest View live


    Latest Images